Published : 13 Jun 2021 03:12 AM
Last Updated : 13 Jun 2021 03:12 AM

ஈரோடு மாவட்டத்துக்கு 13,400 கோவிஷீல்டு தடுப்பூசி வருகை :

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் கோவேக்சின், கோவிஷீல்டு என இரண்டு கரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட மையங்களிலும், தனியார் மருத்துவமனைகளிலும் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தடுப்பூசிக்கு திடீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால் கடந்த ஒரு மாதமாக தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி போடுவது நிறுத்தப்பட்டது. அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மட்டும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஈரோடு மாநகர் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார மையங்களில் நாள்தோறும் 100 பேருக்கு டோக்கன் வழங்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இதன்படி மாவட்டம் முழுவதும் 2 லட்சத்து 42 ஆயிரத்து 250 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் 45 வயதுக்கு மேற்பட்ட 1 லட்சத்து 95 ஆயிரத்து 580 பேருக்கும், 18 வயது முதல் 44 வயதுக்கு உட்பட்ட 46 ஆயிரத்து 670 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக கடந்த ஒரு வாரமாக தடுப்பூசி போடும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஈரோடு மாவட்டத்துக்கு நேற்று 13 ஆயிரத்து 400 கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்துள்ளன. இவை மாவட்டம் முழுவதும் பிரித்து அனுப்பி தடுப்பூசி போடப்படும் என சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர். இதுதவிர, மேலும் 2,000 தடுப்பூசிகள் ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி, பெருந்துறை, சென்னிமலை, பவானி, அந்தியூர், கோபி ஆகிய 8 ஊராட்சி ஒன்றியங்களில் பணியாற்றும் முன்களப் பணியாளர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு போடுவதற்காக வந்துள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x