Published : 12 Jun 2021 07:02 AM
Last Updated : 12 Jun 2021 07:02 AM
ஈரோடு பேருந்து நிலைய வளாகத்தில் வ.உ.சி. காய்கறிச் சந்தை வியாபாரிகள் 500 பேருக்கு நேற்று கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
ஈரோட்டில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக, ஆர்.கே.வி. சாலையில் செயல்பட்டு வந்த நேதாஜி பெரிய காய்கறிச் சந்தை ஈரோடு வ.உ.சி.பூங்கா மைதானப் பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இங்கு 700-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகளும், 50-க்கும் மேற்பட்ட பழக்கடைகளும் உள்ளன. தினமும் நூற்றுக்கணக்கான மொத்த வியாபாரிகள், சில்லரை, வியாபாரிகள் பொதுமக்கள் இங்கு வந்து சென்றனர்.
தற்போது கரோனா பரவல் அதிகரித்துள்ளதால், வ.உ.சி. பூங்கா காய்கறிச்சந்தை மூடப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக ஈரோடு பேருந்து நிலைய வளாகத்தில் மொத்த வியாபாரிகள் மட்டும் காய்கறிகளை வாங்கிச் செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இங்கிருந்து காய்கறிகளை வாங்கிச் செல்லும் வியாபாரிகள், வாகனங்கள், தள்ளுவண்டிகள் மூலம் குடியிருப்புப் பகுதிகளுக்குச் சென்று விற்பனை செய்து வருகின்றனர்.
பொதுமக்களிடம் நேரடியாக தொடர்பில் உள்ள 500-க்கும் மேற்பட்ட காய்கறி வியாபாரிகளுக்கு கரோனா பரிசோதனை செய்ய மாநகராட்சி முடிவு செய்தது.
அதன்படி ஈரோடு பேருந்து நிலைய வளாகத்தில் நேற்று, நடந்த சிறப்பு முகாமில் 500-க்கும் மேற்பட்ட காய்கறி வியாபாரிகளுக்கு கரோனா பரிசோதனை நடந்தது. இதற்கென 4 மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டு இருந்தது.
கரோனா பரிசோதனை முகாமில் காய்கறி வியாபாரிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து பரிசோதனை மேற்கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT