Published : 12 Jun 2021 07:03 AM
Last Updated : 12 Jun 2021 07:03 AM

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் :

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலியில் வண்ணார்பேட்டையில் உள்ள பெட்ரோல் நிலையம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.சங்கரபாண்டியன் தலைமை வகித்தார். முன்னாள் மத்திய இணையமைச்சர் ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன் கண்டன உரையாற்றினார். மாநகர மாவட்ட பொருளாளர் ராஜேஷ்முருகன், மாவட்டச் செயலாளர் பரணி இசக்கி, மண்டல தலைவர் கெங்கராஜ் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் பங்கேற்ற பலரும்கரோனா தடுப்பு கவச உடை அணிந்திருந்தனர். மேலும் பெட்ரோல், டீசல்விலை உயர்வை எதிர்த்து இருசக்கர வாகனத்துக்கு மாலை அணிவித்திருந்தனர். இதுபோல மானூர், சங்கர்நகர், நாரணம்மாள்புரம் உள்ளிட்ட 11 இடங்களில் போராட்டம் நடைபெற்றது.

தென்காசி

தென்காசியில் பெட்ரோல் பங்க் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தென்காசி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பழனிதலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் இருசக்கர வாகனத்தை பாடை கட்டி தூக்கி வந்து, பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வைக் கண்டித்து கோஷமிட்டனர்.

கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்டத்தில் 84 இடங்களில் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நாகர்கோவிலில் கிழக்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமைவகித்தார். மாநகர தலைவர் அலெக்ஸ் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். பார்வதிபுரத்தில் இளைஞர் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் சிவபிரபு, குளச்சலில் கட்சியின் நகரத் தலைவர் சந்திரசேகர், பிரின்ஸ் எம்எல்ஏ, புலியூர்குறிச்சியில் மேற்கு மாவட்ட தலைவர் தாரகை கத்பர்ட் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி குரூஸ் பர்னாந்து சிலை சந்திப்பு அருகே உள்ள பெட்ரோல் பங்க் முன்பு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சி.எஸ்.முரளிதரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் ஏ.பி.சி.வி.சண்முகம், முன்னாள் எம்எல்ஏ சுடலையாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

எட்டயபுரம் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் முன்பு முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் பெருமாள்சாமி தலைமையிலும், முத்தையாபுரம் பெட்ரோல் பங்க் முன்பு முன்னாள் இளைஞர் காங்கிரஸ் மாநில செயலாளர் சகாயராஜ் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சாயர்புரத்தில் வைகுண்டம் தொகுதி எம்எல்ஏ ஊர்வசி எஸ்.அமிர்தராஜ் தலைமையில் மாட்டு வண்டியில் ஏறி நின்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோவில்பட்டி

கோவில்பட்டி பிரதான சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் முன் காங்கிரஸ் கட்சியினர் மோட்டார் சைக்கிளை கயிறு கட்டி இழுத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். நகரத் தலைவர் சண்முகராஜ் தலைமை வகித்தார். வடக்கு மாவட்டத் தலைவர் காமராஜ் தொடங்கி வைத்தார். பொருளாளர் திருப்பதிராஜா முன்னிலை வகித்தார்.

கோவில்பட்டி பசுவந்தனை சாலையில் உள்ள உள்ள பெட்ரோல்பங்க் முன்பு வட்டார காங்கிரஸ் தலைவர் ரமேஷ் மூர்த்தி தலைமையிலும், கடம்பூரில் மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் அய்யலுசாமி தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x