Published : 06 Jun 2021 03:14 AM
Last Updated : 06 Jun 2021 03:14 AM

கழுகுமலை, திருச்செந்தூரில் - ரூ.14 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் :

கோவில்பட்டி/தூத்துக்குடி

கழுகுமலை, திருச்செந்தூரில் ரூ.14.30 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருட்களை போலீஸார் பறிமுதல் செய்து, 3 பேரை கைது செய்தனர்.

கழுகுமலை பகுதியில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவ்வழியாக வந்த மினி லாரியை சோதனையிட்டபோது, 36 மூட்டைகளில் புகையிலை பொருட்கள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.9.30 லட்சமாகும்.

லாரியில் வந்தவர்களிடம் விசாரித்ததில், கர்நாடக மாநிலம், பெங்களூரு பகுதியில் உள்ள பொம்மசந்திரா என்ற இடத்தில் இருந்து புகையிலை பொருட்களை ஏற்றி வந்ததும், கழுகுமலை ஆறுமுக நகரைச் சேர்ந்த சந்திர சேகர் என்பவருக்குச் சொந்தமான கிட்டங்கிக்கு அவற்றை கொண்டு செல்வதும் தெரியவந்தது.

இதையடுத்து, மினி லாரி ஓட்டுநர் சேலம் மாவட்டம், கடையம்படி தாலுகா, மாமரத்தூரைச் சேர்ந்த சீனிவாசன்(36), உதவியாளர் தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி தாலுகா, மூளக்காடைச் சேர்ந்த மாது(37) ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்து, புகையிலைப் பொருட்கள் மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்தனர். சந்திரசேகரை தேடி வருகின்றனர்.

திருச்செந்தூர்

திருச்செந்தூர் பகுதியில் தனிப்படை காவல் ஆய்வாளர் சுந்தரம் தலைமையிலான போலீஸார் பரமன்குறிச்சி வட்டன்விளை பேருந்து நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த சுமை வாகனத்தில் புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது.

இதுதொடர்பாக ஓட்டுநர் முதலூர்கடாட்சபுரம் முத்துகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த வேதமுத்து(39) என்பவரை கைது செய்தனர். விசாரணையில், திருநெல்வேலியை சேர்ந்த முருகன் என்பவரிடம் புகையிலை பொருட்களை மொத்தமாக வாங்கி விற்பனைக்கு கொண்டு செல்வதாக தெரிவித்தார். 451 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதன் மதிப்பு ரூ.5 லட்சம் ஆகும். முருகனை தாலுகா போலீஸார் தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x