Published : 04 Jun 2021 03:15 AM
Last Updated : 04 Jun 2021 03:15 AM
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில் கரோனா சிகிச்சைக்கு சித்த மருத்துவ சிகிச்சை மையம் தொடங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து தஞ்சாவூர் ஆட்சியர் ம.கோவிந்தராவுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம் மின்னஞ்சல் மூலம் அனுப்பியுள்ள மனுவில் தெரிவித்துள்ளது:
கும்பகோணம் பகுதி கோவிலாச்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் உள்ள கரோனாவுக்கான சித்த மருத்துவ சிகிச்சை மையத்தில் ஏராளமானவர்கள் தங்கி சிகிச்சை பெற்று குணமாகி உள்ளனர். எனவே, தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் உள்ள சித்த மருந்து பிரிவில் சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை உடனே தொடங்க வேண்டும். அங்குள்ள கலையரங்கில் 300 படுக்கைகள் கொண்டதாக அந்த சிகிச்சை மையத்தை செயல்படுத்த முடியும். தஞ்சாவூர் மாவட்டத்தில் கரோனா தொற்றின் 2-வது அலையின் வீச்சு கிராமங்களை கடுமையாக பாதித்துள்ளது.
எனவே, கிராம வாரியாக முகாம் நடத்தி கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து, தொற்றாளர்களை தனிமைப்படுத்தும் முகாம்களில் வைத்து குறிப்பிட்ட காலம் சிகிச்சை அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT