Published : 27 May 2021 03:10 AM
Last Updated : 27 May 2021 03:10 AM
கிருஷ்ணகிரியில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடுவதற்கான சிறப்பு முகாமில் இளைஞர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஊசி செலுத்திக் கொண்டனர்.
கிருஷ்ணகிரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோர் 44 வயதிற்கு உட்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நடந்தது. இதில் அரசு மருத்துவர்கள் சுசித்ரா, வெங்கடேஷ் மற்றும் செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர் சக்திவேல், ரோட்டரி கிளப் மற்றும் ஆற்காடு தொண்டு நிறுவனத்தினர் பங்கேற்று தடுப்பூசி போடும் முகாமினை ஒருங்கிணைத்து நடத்தினர்.
இதுதொடர்பாக மருத்துவர்கள் கூறுகையில், இம்முகாமில் 18 வயதுக்கு மேற்பட்ட 44 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்படுகிறது.
தடுப்பூசி செலுத்திக் கொள் வதன் மூலம் தங்களையும், தங்கள் குடும்பத்தையும், சமூகத்தையும் கரோனா நோயிலிருந்து பாதுக்காத்துக் கொள்ளலாம் என்றனர். தடுப்பூசி முகாமில் ஊசி செலுத்திக்கொள்ள சுமார் 250-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, தடுப்பூசி போட்டு சென்றனர்.
தருமபுரியில் ஆர்வம் அதிகரிப்பு
தருமபுரி மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்களிடையே ஆர்வம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.கரோனா இரண்டாம் அலையின் பாதிப்புகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில் தடுப்பூசி மீதான விழிப்புணர்வு மக்கள் மத்தியில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் 18 முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்கு தற்போது தருமபுரி, அரூர், பென்னாகரம், பாலக் கோடு, நல்லம்பள்ளி, பாப்பிரெட்டிப்பட்டி, காரிமங்கலம் ஆகிய இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளிலும், மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கரோனா தடுப்பூசி போடப்படுகிறது.
இங்கெல்லாம் கடந்த சில நாட்களாக தடுப்பூசி போட்டுக் கொள்ள வருவோர் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக இளையோர் பலர் ஆர்வத்துடன் வந்து சிறப்பு முகாம்களில் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர்.
இதேபோல், அனைத்து வயது தரப்பினரும் தயக்கமின்றி கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டு தங்களை தொற்றில் இருந்து தற்காத்துக் கொள்ள வேண்டும் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT