Published : 27 May 2021 03:11 AM
Last Updated : 27 May 2021 03:11 AM
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளுக்கு நாள் கரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. நேற்று வரை மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டியுள்ளது. தற்போது, 7,543 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். கரோனாவைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் நகராட்சி நிர்வாகமும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கிருஷ்ணகிரி நகராட்சியில் உள்ள 33 வார்டுகளிலும் லைசால் மருந்து தெளிக்கும் பணி தீவிரமாக முடுக்கி விடப்பட்டுள்ளன. ஒரு டிராக்டர் மூலம் 5 ஆயிரம் லிட்டர் கொள்ளளவிலான மருந்தை 5 ஊழியர்கள் தினமும் அனைத்து பகுதிகளிலும் தெளித்து வருகின்றனர்.
குறிப்பாக பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் ஆட்சியர் அலுவலகம், எஸ்.பி., அலுவலகம், அரசு மருத்துவமனை, ஆர்.டி.ஓ., மற்றும் தாலுகா அலுவலகம், டிஎஸ்பி அலுவலகம், நகர காவல் ஆய்வாளர், நகராட்சி அலுவலகம் ஆகிய பகுதிகளில் தினமும் மருந்து தெளித்து வந்தனர்.
தற்போது முழு ஊரடங்கால் நகரின் அனைத்து சாலைகள், தெருக்கள், வீடுகள் தோறும் மருந்து தெளித்து வருகின்றனர். இதற்கான ஏற்பாடுகளை நகராட்சி ஆணையர் சந்திரா மற்றும் சுகாதார அலுவலர் மோகனசுந்தரம் ஆகியோர் செய்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT