Published : 26 May 2021 03:13 AM
Last Updated : 26 May 2021 03:13 AM
வள்ளுவர்புரத்தில் 27 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், குடிநீர் பிடிக்க மக்கள் ஒரே இடத்தில் கூடுவதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஊராட்சி ஒன்றியம், பெலவர்த்தி ஊராட்சிக்கு உட்பட்ட வள்ளுவர்புரம் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் கீழ் பகுதியில், ஒரே இடத்தில் 20-க்கும் மேற்பட்ட குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால்மக்கள் தண்ணீர் பிடிக்க அதிகளவில் இங்கு வருகின்றனர். இந்நிலையில் இக்கிராமத்தில் 27 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, பர்கூர் பொறியியல் கல்லூரி கரோனா சிறப்பு மையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 3 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
ஊரில் பொதுமக்கள் அனைவரும் ஒரே இடத்தில் கூடி தண்ணீர் பிடிக்கின்றனர். இதில் பெரும்பாலும் முகக்கவசம் அணியாதது, சமூக இடை வெளியை கடைபிடிக்காதது உள்ளிட்டவையால் கரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அப்பகுதி மக்கள் கூறும்போது, குடிநீர் குழாய்கள் தனித்தனியாக அமைத்து தர வேண்டும். கரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையிலும் சுகாதாரத்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கிருமி நாசினி தெளிக்கவில்லை. எனவே கிருமி நாசினி தெளித்து, ஒரே நேரத்தில் அதிக மக்கள் தண்ணீர் பிடிக்க கூடுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT