Published : 24 May 2021 03:11 AM
Last Updated : 24 May 2021 03:11 AM

முழு ஊரடங்கை மீறினால் கடும் நடவடிக்கை : திண்டுக்கல் டி.ஐ.ஜி முத்துச்சாமி எச்சரிக்கை

திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் அரசின் முழு ஊரடங்கை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திண்டுக்கல் டி.ஐ.ஜி முத்துச்சாமி தெரிவித்துளார்.

அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:

திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த மே 24 (இன்று) முதல் மே 31-ம் தேதி வரை முழு ஊரடங்கை நடைமுறைப்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு அனைத்து காவல்துறை அதிகாரிகளும் முழு முயற்சி எடுக்கவேண்டும். ஊடகத் துறையினரை யாரும் தடுத்து நிறுத்தக் கூடாது.

மருத்துவமனைகள், மருந்தகங்கள், கால்நடை மருந்தகங்கள், நாட்டு மருந்தகங்கள், பெட்ரோல் பங்க், ஏடிஎம் தவிர ஏனைய கடைகள் மற்றும் நிறுவனங்கள் திறக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். குடிநீர், பால், நாளிதழ், அத்தியாவசியப் பொருட்கள், வேளாண் விளைபொருட்களை விநியோகம் செய்ய அனுமதிக்க வேண்டும். சரக்கு வாகனங்களை வழக்கம் போல் இயக்கலாம்.

உணவகங்களில் பார்சல் சேவை காலை 6 முதல் 9 மணிவரை, பகல் 12 முதல் 3 மணி வரை, இரவு 6 முதல் 9 மணிவரை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.

வெளிமாவட்டங்களில் இருந்து மருத்துவக் காரணங்களுக்காக மற்றும் இறப்புக்காக வரக்கூடிய வாகனங்கள், நபர்களை இ-பதிவு தணிக்கை செய்த பின்னரே அனுமதிக்க வேண்டும்.

முழு ஊரடங்கை மீறுவோரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x