Published : 17 May 2021 03:14 AM
Last Updated : 17 May 2021 03:14 AM

பெருந்துறை அரசு மருத்துவமனையில் - கூடுதல் படுக்கை வசதிக்கான கட்டிடம் கட்டும் பணி தொடக்கம் :

பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கூடுதல் படுக்கை வசதி மேற்கொள்வதற்கான கட்டிடப் பணிகளை பூமி பூஜையிட்டு அமைச்சர் சு.முத்துசாமி தொடங்கி வைத்தார்.

ஈரோடு

பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கூடுதல் படுக்கை வசதிக்கான கட்டிடம் கட்டும் பணிகள் பூமி பூஜையுடன் நேற்று தொடங்கியது.

பெருந்துறையில் செயல்படும் ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கடந்த ஆண்டு முதல் கரோனா சிறப்பு மருத்துவமனையாகச் செயல்பட்டுவருகிறது. இம்மருத்துவமனைக்கு ஈரோடு மட்டுமின்றி திருப்பூர்,கோவை, நாமக்கல், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த கரோனா நோயாளிகளும் சிகிச்சைக்கு வருவதால், கூடுதல் படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன் உள்ளிட்டவற்றின் தேவை அதிகரித்துள்ளது..

இதையடுத்து மருத்துவமனை வளாகத்தில் கூடுதல் படுக்கைகள் அமைக்க கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நேற்று நடந்தது. வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி பணிகளைத் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல்கட்டமாக 300 படுக்கைகளும், அடுத்த கட்டமாக 200 படுக்கைகள் என படிப்படியாக 1000 படுக்கைகள் கூடுதலாக அமைக்கப்படவுள்ளது. மேலும், கரோனா அறிகுறி உள்ளவர்கள் பரிசோதனை (ஆர்டிபிசிஆர் டெஸ்ட்) மேற்கொள்வதற்காக ஒரு மையம், சிகிச்சை மேற்கொள்ள ஒரு மையம், தடுப்பூசி செலுத்த தனி மையம் இங்கு அமைக்கப்படுகிறது.

ஈரோடு மாவட்டத்தில் 100 வீடுகளுக்கு ஒரு பொறுப்பாளர் என பொதுமக்களின் வீடுகளுக்கு நேரில் சென்று தொற்று தொடர்பான விவரங்கள் குறித்து சேகரிக்க நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது. அவ்வாறு தொற்று உள்ள நபர்களை கரோனா சிகிச்சை மையங்களுக்கு அழைத்து வரப்பட்டு உரிய சிகிச்சை வழங்கப்படும். கரோனா சிகிச்சை மையங்களுக்காக அரசுப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், தனியார் கல்லூரிகள் ஆகியவை பயன்படுத்தப்படுகிறது.

கரோனா நோயாளிகளுக்கென ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் 150 படுக்கைகள், பெருந்துறை அரசு மருத்துவமனையில் 550 படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மீதம் உள்ள அரசு மருத்துவமனைகள், வட்டார மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவை பொது நோயாளிகளுக்கு மட்டும் பயன்படுத்தப்படும்.

எனவே, கரோனா தொற்று உறுதி செய்யப்படுபவர்கள் சிகிச்சை மையங்களை அணுகி உரிய சிகிச்சையினை பெற வேண்டும். கரோனா பாதிப்பு தொடர்பான நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க மாவட்ட அளவில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் படுக்கை வசதி உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் இந்த கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன், எஸ்பி தங்கதுரை, மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன், மாநகராட்சி ஆணையர் இளங்கோவன், பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x