Published : 30 Apr 2021 03:14 AM
Last Updated : 30 Apr 2021 03:14 AM

சிப்காட்டில் கழிவுநீர் வெளியேற்றிய சுத்திகரிப்பு நிலையத்தை மூட உத்தரவு :

ஈரோடு

பெருந்துறை சிப்காட்டில் சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை வெளியேற்றிய சுத்திகரிப்பு நிலைய மின் இணைப்புத் துண்டித்து, அதனை மூடுவதற்கு மாசு கட்டுப்பாடு வாரியத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட்டில் தோல் தொழிற்சாலைகளின் பொது சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து, சுத்திகரிக்கப்படாத நச்சுக் கழிவுநீர் குழாய்கள் வழியாக வெளியேற்றப்பட்டது குறித்து, சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நலச்சங்கம் மாசுகட்டுப்பாடு வாரியத்தில் ஆதாரத்துடன் புகார் அளித்தது. இதையடுத்து மாசுகட்டுப்பாடு வாரிய பொறியாளர்கள் சம்பவ இடத்தில் ஆய்வு நடத்தினர்.

அதன் தொடர்ச்சியாக, மாசுக்கட்டுப்பாடு வாரிய தலைமை அலுவலகத்திற்கு அறிக்கை அனுப்பப்பட்டது. அதில், சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து குழாய் மூலம் கழிவுநீர் வெளியேற்றப்பட்டது கண்டறியப்பட்டு, சுத்திகரிப்பு நிலையத்திடமிருந்து விளக்கம் பெறப்பட்டதைத் தொடர்ந்து, இந்நிறுவனத்தின் மீது உரிய மேல் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டது.

இந்த பரிந்துரையின் அடிப்படையில், பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் மின் இணைப்பைத் துண்டித்து, நிறுவனத்தை மூட மாசுக்கட்டுப்பாடு வாரியத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x