Published : 27 Apr 2021 06:29 AM
Last Updated : 27 Apr 2021 06:29 AM

செங்கல்பட்டு மாவட்டத்தில் - வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கு பயிற்சி முகாம் :

செங்கல்பட்டு ஆட்சியர் தலைமையில் வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கு பயிற்சி முகாம் நேற்று மறைமலை நகரில் நடைபெற்றது.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள7 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கு பயிற்சி முகாம் நேற்று மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் தலைமையில் நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஏப்ரல் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப் பெட்டிகள் வாக்கு எண்ணும் மையங்களான தாம்பரம், தண்டலம், மதுராந்தகம் ஆகிய பகுதியில் உள்ள கல்லூரிகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. மே 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளதால் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பணியாற்றும் வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் மறைமலை நகரில் மாவட்ட ஆட்சியர் அ. ஜான் லூயிஸ் தலைமையில் நேற்று நடைபெற்றது.

வாக்கு எண்ணும் மையத்தில் பணியாற்றும் அலுவலர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு பணிகள் வழங்கப்பட உள்ளன.வாக்கு எண்ணிக்கையின் மேஜையில் ஒரு மேற்பார்வையாளர், ஓர் உதவியாளர், ஒரு நுண் பார்வையாளர் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். வாக்கு எண்ணிக்கையின்போது அலுவலர்கள் அனைவரும் அதிகாலை 5 மணிக்கு வாக்கு எண்ணும் மையத்துக்குள் தயாராக இருக்க வேண்டும், வாக்கு எண்ணும் அலுவலர்கள் வாக்கு எண்ணிக்கை ஆரம்பம் முதல் இறுதி வரை தமக்கு ஒதுக்கப்பட்ட மேஜையை தவிர்த்து வேறு எங்கும் செல்லக்கூடாது. வாக்கு எண்ணிக்கையின்போது ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் உடனடியாக தெரிவிக்க வேண்டும். வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து சிறப்பான முறையில் பணியாற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x