Published : 22 Apr 2021 03:14 AM
Last Updated : 22 Apr 2021 03:14 AM
தமிழகத்தில் புதிய அரசு அமையும் வரை, உயர் மின் கோபுர திட்டப்பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும் என, ஈரோடு மற்றும் திருப்பூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தினர்.
திருப்பூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் கே.சுப்பராயன், ஈரோடுமக்களவைத் தொகுதி உறுப்பினர்கணேசமூர்த்தி ஆகியோர் திருப்பூர் ஆட்சியர் க.விஜயகார்த்திகேயனிடம் நேற்று மனு அளித்தனர். அதன்பின்பு அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம் சூரியநல்லூர் கிராமத்தில் சுஸ்லான் நிறுவனமும், பல்லடம் வட்டம் வாவிபாளையத்தில் பவர் கிரிட் நிறுவனமும் உயர்மின் கோபுரதிட்டப் பணிகளை தொடங்கியுள்ளன. இதற்கு விவசாயிகள் மத்தியில்கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
மேலும், உயர் மின் கோபுர திட்டப் பணிகள் மேற்கொள்வது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கின் மேல்முறையீடு நிலுவையில் உள்ளது. இதனால் வழக்கு முடியும் வரை இந்தப் பணிகளை நிறுத்த வேண்டும். போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டதற்கும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். உயர் மின் கோபுர திட்ட பணிகளை நிறுத்துவதுடன், இது தொடர்பாக விவசாயிகளை அழைத்து மாவட்ட நிர்வாகம் பேச வேண்டும் என விவசாயிகள் தரப்பில் தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயசங்க நிர்வாகிகள் சிவக்குமார், தனபால் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில்அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கை உடனடியாக திரும்பப்பெறுவதோடு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள விவசாயிகளை எவ்விதநிபந்தனையுமின்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். தமிழகத்தில் புதிய அரசு அமையும் வரை, உயர்மின் கோபுர திட்டப்பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
மக்களவை உறுப்பினர்களின் கோரிக்கை தொடர்பாக, அரசுக்கு பரிந்துரை செய்வதாக ஆட்சியர் உறுதி அளித்துள்ளார். இதில், தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் நிறுவனர் ஈசன், மாநிலத் தலைவர் இரா. சண்முகசுந்தரம் உட்பட பலர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT