Published : 20 Apr 2021 03:15 AM
Last Updated : 20 Apr 2021 03:15 AM
திருமண மண்டபங்கள் மற்றும் திருவிழாக்களில் சினிமா தியேட்டர்கள் போல் 50 சதவீத பங்கேற்பாளர் களை அனுமதிக்க வேண்டும் என விழாக்களுக்கான பந்தல், மேடை அலங்காரம் உள்ளிட்ட பணிகளைச் செய்யும் தொழிலாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்ப தாவது:
தமிழகம் முழுவதும் ஒலி, ஒளி, ஜெனரேட்டர், பந்தல், சாமியானா, பர்னிச்சர், சமையல் பாத்திரங்கள், மேடை அலங்காரம், மணவறை அலங்காரம் செய்யும் தொழிலை நம்பி லட்சக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளனர். எங்களது தொழில் ஆண்டு முழுவதும் வருவாய் தரக் கூடியது இல்லை. திருமண விசேஷங்கள், விழாக்கள் நடைபெறும் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் மட்டுமே தொழில் நடந்து வருகிறது.
இந்த தொழிலில் ஈடுபடுவோர், விழாக்களை நம்பி, பல கோடி ரூபாய் மதிப்பில் பொருட்களை முதலீடாக்கி உள்ளனர். கடந்த ஆண்டு பொது முடக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து தற்போதுதான் மீண்டு வருகிறோம். இந்நிலையில், தமிழக அரசு அறிவித்துள்ள கரோனா கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகள் எங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.
சமூக இடைவெளியைப் பின்பற்றி, தொழிற்சாலைகள், சினிமா தியேட்டர்கள் மற்றும் வணிக வளாகங்கள் அனைத்தும் 50 சதவீதம் பேரைக் கொண்டு இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், திருமண மண்டபங்களிலும் 50 சதவீத விருந்தினர் களுடன் நிகழ்ச்சிகளை நடத்திக் கொள்ளவும், அரசு அறிவித்துள்ள அனைத்து பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி அனைத்து மதம், சமூகம் சார்ந்த நிகழ்ச்சிகள் திருவிழாக்கள் மற்றும் தனியார் நிறுவனம் சார்ந்த கூட்டங்கள் நடத்த சிறப்பு அனுமதி அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித் துள்ளனர்.
முன்னதாக, ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பாக அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT