Published : 18 Apr 2021 03:18 AM
Last Updated : 18 Apr 2021 03:18 AM
மேட்டூர் அருகே இளைஞர் கொலை வழக்கில் 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி சேலம் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி 15-ம் தேதி இரவு மேட்டூர் அடுத்த வாய்க்கால்பட்டறை எலிகரடு வாய்க்கால் கரையில் ஜெகதீஷ்குமார் (33), அவரது தம்பி சர்தார் (22) ஆகியோர் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த மேட்டூர் பொன்நகர் பகுதியைச் சேர்ந்த ரவுடிகள் தமிழரசன் (24), கார்த்தி (24) ஆகியோர், சகோதரர்களிடம் மது வாங்கி வரச்சொல்லி கட்டாயப்படுத்தினர்.
இதில், அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ஜெகதீஷ் குமாரை, தமிழரசன், கார்த்தி ஆகியோர் சேர்ந்து அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனர். இதுதொடர்பாக மேட்டூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தமிழரசன், கார்த்தி ஆகியோரை கைது செய்தனர்.
இவ்வழக்கு விசாரணை சேலம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில், நேற்று முதன்மை மாவட்ட நீதிபதி குமரகுரு, குற்றம்சாட்டப்பட்ட தமிழரசன், கார்த்தி ஆகிய இருவருக்கும் கொலை குற்றத்துக்காக ஒரு ஆயுள், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் மற்றொரு ஆயுள் தண்டனை என இரட்டை ஆயுள் தண்டனையும், தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். மேலும், தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT