Published : 16 Apr 2021 03:12 AM
Last Updated : 16 Apr 2021 03:12 AM
உயர் மின்கோபுரம் அமைப்பதற்கான அளவீட்டு பணிகள் நேற்று தொடங்கப்பட்டதை கண்டித்து, பல்லடம் அருகே விவசாயிகள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசின் பவர்கிரிட் நிறுவனமும், தமிழக அரசின் தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகமும் இணைந்து, தமிழகத்தின் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், திண்டுக்கல் உட்பட 10 மாவட்டங்களில் விவசாய விளைநிலங்கள் வழியாக உயர் மின்கோபுரம்அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இதற்காக, தாராபுரம் அருகே நியூ புகளூர்- இடையர்பாளையம் வரை 400 கி.வாட் உயர் மின் திட்டம் தயாரிக்கப்பட்டு, இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. விவசாய விளைநிலங்கள் வழியாக உயர் மின்கோபுரங்களை கொண்டுசெல்வதற்கு பதிலாக, சாலையோரம் கேபிள் மூலமாக செயல்படுத்த வலியுறுத்தி பல்வேறுபோராட்டங்களில் விவசாயிகள் ஈடுபட்டனர். இந்நிலையில், திருப்பூர்மாவட்டம் பல்லடம் அருகே வாவிபாளையம் கிராமத்தில் விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி, உயர் மின்கோபுரம் அமைப்பதற்கான அளவீட்டுபணிகள் நேற்றுதொடங்கப்பட்டன. பல்லடம் வட்டாட்சியர் தேவராஜன்தலைமையில், பவர்கிரிட் நிறுவன அதிகாரிகள் பணியை தொடங்கினர்.இதையறிந்த அப்பகுதி விவசாயிகள் 100-க்கும் மேற்பட்டோர், வட்டாட்சியர் மற்றும் பவர்கிரிட் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அளவீடும், இழப்பீடும்
இதுதொடர்பாக விவசாயிகள் கூறும்போது, "விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி இப்பகுதியில் அளவீட்டுபணிகள் முடிவடைந்து, உயர் மின்கோபுர பணிகள் நடைபெற்று வருகின்றன. விளைநிலத்தில் எதற்காக அளவீட்டு பணிகளை மேற்கொள்கிறார்கள்? ஏற்கெனவே அளவீட்டு பணிகள் நிறைவடைந்திருந்த நிலையில், தற்போது வேறுபாதையில் எதற்காக அளவீடு செய்ய வேண்டும்? இத்திட்டத்துக்காக ஏராளமான விளைநிலங்களை இழந்த நிலையில் மீண்டும் எங்களால் நிலத்தை இழக்க முடியாது. அளவீட்டு பணிகளை தொடரவிடமாட்டோம். மேலும், விவசாயிகளின் பயிருக்கு என்ன இழப்பீடு வழங்குவது தொடர்பாகவும், அதிகாரிகள் தெளிவாக பதில் அளிக்கவில்லை. பயிர் இழப்பீடு தொடர்பாகவும் கணக்கெடுக்கவில்லை" என்றனர். இதைத்தொடர்ந்து விவசாயிகளுக்கும், போலீஸார் மற்றும் அங்கிருந்த அதிகாரிகளுக்கும் வாக்குவாதம் எழுந்தது.அரசு அதிகாரிகளிடம் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப் படும் என போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நேற்று மதியம் மழை பெய்த போதும் விவசாயிகள் கலைந்து செல்லாமல்காத்திருந்தனர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால்,அப்பகுதியில் அதிகளவில் போலீஸார் குவிக்கப்பட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT