Published : 10 Apr 2021 03:13 AM
Last Updated : 10 Apr 2021 03:13 AM

தேர்தல் விதி மீறலில் ஈடுபட்ட - பர்கூர் அதிமுக எம்எல்ஏ மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை :

எமக்கல்நத்தம் கிராமத்தில் தேர்தல் தினத்தன்று ஏற்பட்ட தகராறின் போது அதிமுகவினர் தாக்கியதால் ஏற்பட்ட சேதங்களை, திமுக எம்எல்ஏ செங்குட்டுவன் பார்வையிட்டார்.

கிருஷ்ணகிரி

தேர்தல் விதிமுறையை மீறிய அதிமுக எம்எல்ஏ., மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் எமக்கல்நத்தம் கிராமத்தில் நேற்று, மாவட்ட திமுக பொறுப்பாளர் செங்குட்டுவன் எம்எல்ஏ, தேர்தல் தினத்தன்று அதிமுகவினர் அடித்து உடைத்த வீடுகளை பார்வையிட்டார். இதுதொடர்பாக அவர் கூறும் போது, காரகுப்பம் ஊராட்சிக்குட்பட்ட, எமக்கல்நத்தம் வாக்குச் சாவடியில் தேர்தல் தினத்தன்று, தேர்தல் விதி மீறி கட்சிக் கொடியுடன் வந்த பர்கூர் அதிமுக எம்எல்ஏ, ராஜேந்திரன் வாக்குச்சாவடியின் கதவுகளை மூடி, தேர்தலை நிறுத்தக் கோரி ஏற்பட்ட பிரச்சினையால் 3 மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் அவரது ஆதரவாளர்கள் சுமார் 200-க்கும் அதிகமானோர் அக்கிராமத்தில் உள்ள ஒன்றிய செயலாளர் கோவிந்தராசன் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோரின் வீட்டு ஜன்னல் கண்ணாடி, கதவுகளை அடித்து நொறுக்கியதுடன், இருசக்கர வாகனங்களை சேதப்படுத்தினர். இதுதொடர்பாக திமுக சார்பில் புகார் அளித்தும் காவல்துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக தற்போதைய எம்எல்ஏ.,வின் புகாரை மட்டும் ஏற்று வழக்குப்பதிவு செய்து, கைது நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். எனவே, ஒருதலைப்பட்சமாக காவல்துறை செயல்படுவதை கண்டிப்பதுடன், அதிமுக எம்எல்ஏ, ராஜேந்திரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இந்நிகழ்வின் போது, மாவட்ட துணை செயலாளர் நாகராஜ், மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x