Published : 30 Mar 2021 03:15 AM
Last Updated : 30 Mar 2021 03:15 AM
தேர்தல் புகார் தொடர்பான புகைப் படம், வீடியோக்களை செயலியில் பதிவேற்றம் செய்யலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ஜெயசந்திர பானு ரெட்டி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் மாதிரி நடத்தை விதிமீறல்களை இணையவழி மூலம் புகாராக தெரிவிக்க சிவிஜில் என்ற கைபேசி செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இச்செயலி மூலம் பெறப்படும் புகார்கள், 24 மணி நேரமும் செயல்படும் மாவட்ட கட்டுப்பாட்டு அறை அலுவலர்களால், தொடர்புடைய புகார் பெறப்பட்ட பகுதியிலுள்ள பறக்கும் படைக்கு அனுப்பி வைக்கப்படும்.
புகாருக்கான நடவடிக்கையை புகார் செய்தவர் இச்செயலி வாயிலாகவே அறிந்து கொள்ளலாம். புகார்கள் நடவடிக்கைகளை தேர்தல் பார்வையாளரும் கண்காணிப்பார். இச்செயலியை கூகுள் ப்ளேஸ்டோரில் இருந்து பொதுமக்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இச்செயலி ஜிபிஎஸ் வசதியை பயன்படுத்தி இயங்குவதால், புகார் வரப்பெற்ற இடத்தினை எளிதில் கண்டறியலாம். மேலும்,செயலியில் புகாருடன், புகாருக்கு தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளை நேரடியாக பதிவேற்றம் செய்யலாம். எனவே, பொதுமக்கள் இச்செயலியை முறையாக பயன்படுத்தி தேர்தல் விதிமீறல்களை உடனுக்குடன் தெரியப்படுத்த வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT