Published : 10 Mar 2021 03:12 AM
Last Updated : 10 Mar 2021 03:12 AM

பெங்களூருவில் இருந்து சேலத்துக்கு கடத்த முயன்ற குட்கா பொருட்கள் பறிமுதல் :

கிருஷ்ணகிரி

பெங்களூருவில் இருந்து சேலத்திற்கு கடத்த இருந்த ரூ.11 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்களை லாரியுடன் பறிமுதல் செய்த போலீஸார், 2 பேரை கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை போலீஸ் எஸ்எஸ்ஐ மகேந்திரன் மற்றும் போலீஸார், ராயக்கோட்டை - கிருஷ்ணகிரி சாலையில் வஜ்ஜிரபள்ளம் எல்லப்பன் கொட்டாய் என்னுமிடத்தில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த மினி லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், கடலைக்காய் பொட்டு மூட்டைகளை இருபுறமும் வைத்துவிட்டு, இடையில் 60 பெட்டிகளில் தடை செய்யப்பட்ட ரூ. 11 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் இருப்பதை கண்டுபிடித்தனர்.

விசாரணையில், பெங்களூருவில் இருந்து ராயக்கோட்டை வழியாக சேலத்திற்கு குட்கா பொருட்களை கடத்தி செல்ல இருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார், ரூ. 5 லட்சம் மதிப்பிலான மினி லாரியுடன், ரூ. 11 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்களையும் பறிமுதல் செய்தனர். மேலும், லாரி ஓட்டுநரான சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே கோணான்குட்டையூர் அருந்ததியர் தெருவைச் சேர்ந்த சிரஞ்சீவி (35), தருமபுரி இலக்கியம்பட்டி பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் (38) உள்ளிட்ட 2 பேரையும் கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x