Published : 04 Mar 2021 05:52 AM
Last Updated : 04 Mar 2021 05:52 AM
வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க வலியுறுத்தி கிருஷ்ணகிரி, ஓசூரில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி ஏந்தி கொடி அணிவகுப்பு நடத்தினர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சட்டப்பேரவை தேர்தலை பாதுகாப்பாகவும், அமைதி யாகவும் நடத்துவதற்காக, கர்நாடக மாநிலம் மங்களூரில் இருந்து மத்திய தொழில் பாதுகாப்பு படையைச்சேர்ந்த 92 வீரர்கள் கிருஷ்ணகிரிக்கு வந்துள்ளனர். சட்டப்பேரவை தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கவும், பாதுகாப்புடன் தேர்தல் நடத்தப்படும் என்பதை வலியுறுத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் மத்திய படையினர் நேற்று கிருஷ்ணகிரியில் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
கிருஷ்ணகிரி பழையபேட்டை மேல்தெருவில் தொடங்கிய கொடி அணி வகுப்புக்கு, கிருஷ்ணகிரி டிஎஸ்பி சரவணன், மத்திய தொழில் பாதுகாப்பு படை கமாண்டர் நாகராஜப்பா ஆகியோர் தலைமை வகித்தனர். காவல் ஆய்வாளர்கள் கிருஷ்ணகிரி நகரம் பாஸ்கர், தாலுகா சுரேஷ்குமார், மகாராஜகடை கணேஷ்குமார், காவேரிப் பட்டணம் வெங்கடாசலம், உதவி ஆய்வாளர் சிவசுந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதேபோன்று ஓசூரிலும் நேற்று போலீஸார் மற்றும் துணை ராணுவப் படையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர். ஓசூர் காமராஜ் காலனி மைதானத்தில் இருந்து புறப்பட்ட அணிவகுப்புக்கு ஓசூர் டிஎஸ்பி முரளிதரன் தலைமை தாங்கினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT