Published : 08 Feb 2021 03:10 AM
Last Updated : 08 Feb 2021 03:10 AM
அரசுக்கு எதிராக முழக்கமிட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள் 3 பேரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.
மாவோயிஸ்ட்டுகளை பிடிக்க கேரளா மாநில அரசு அமைத்துள்ள, ‘தண்டர்போல்ட்’ கமாண்டோ படைப்பிரிவினருக்கும், மாவோஸ்ட்டுகளுக்கும் இடையில் கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் 28-ம் தேதி கேரள மாநிலம் அட்டப்பாடி அருகே வனப்பகுதியில் தூப்பாக்கி சண்டை நடந்தது. இதில், 4 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
சுட்டுக் கொல்லப்பட்டவர்களில் சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த கணவாய்புதூர் கிராமத்தைச் சேர்ந்த மணிவாசகமும் ஒருவர். அவரது உடல் சொந்த ஊரான கணவாய்புதூரில் கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் 15-ம் தேதி தகனம் செய்யப்பட்டது.
அவரது இறுதிச் சடங்கின்போது, மாவோயிஸ்ட்டுக்கு ஆதரவாகவும், அரசுக்கு எதிராகவும் சிலர் முழக்கங்களை எழுப்பியதாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக கணவாய்புதூர் கிராம நிர்வாக அலுவலர் சங்கர் கொடுத்த புகாரின்பேரில், சிலர் மீது தீவட்டிப்பட்டி போலீஸார், சட்ட விரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட சில பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர்.
இதுதொடர்பாக 6 பேரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், வழக்கில் தொடர்புடையவர்களை பிடிக்க தனிப்படை அமைத்து தேடிவந்தனர்.
இந்நிலையில், ஓமலூர் டிஎஸ்பி சோமசுந்தரம் தலைமையிலான தனிப்படை போலீஸார், இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த சேலம் மின்னாம்பள்ளியைச் சேர்ந்த சிபிஐ (எம்எல்) முன்னாள் மாவட்டச் செயலாளர் செல்வராஜ் (55), ஓமலூர் ஆணைகவுண்டம்பட்டியைச் சேர்ந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி மாநில பொதுச் செயலாளர் பாலன் (41), சேலம் செல்வநகர் பகுதியைச் சேர்ந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி மாவட்ட தலைவர் சீனிவாசன் (66) ஆகியோரை கைது செய்தனர்.
கைதானவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்து, முடிவு வந்த பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT