Published : 09 Jan 2021 03:10 AM
Last Updated : 09 Jan 2021 03:10 AM

ஒரு முறை நிர்ணயித்துவிட்டால் மூன்று மாதங்களுக்கு நூல் விலையை மாற்றக்கூடாது திருப்பூர் சைமா சங்கக் கூட்டத்தில் தீர்மானம்

ஒரு முறை நிர்ணயித்தால் 3 மாதங்களுக்கு நூல் விலையை நூற்பாலைகள் மாற்றக்கூடாது என்று, சைமா சங்க செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருப்பூரில் நடந்த கூட்டத்தில் சைமா சங்கத் தலைவர் ஏ.சி.ஈஸ்வரன் பேசும்போது, "பின்னலாடைத் தொழிலுக்கு தேவையான நூல் மற்றும் உப தொழில்களின் விலை உயர்வை கருத்தில்கொண்டு, கடந்த 17-ம் தேதி முதல் பின்னலாடைகளுக்கு 10 சதவீதம் விலை உயர்வு செய்யலாம் என அறிவித்திருந்தோம். தமிழகத்தில் இயங்கும் 4 நூற்பாலை சங்கங்களுக்கும், கடந்த 5-ம் தேதி கடிதம் எழுதி, உயர்த்தப்பட்ட நூல் விலையை மறுபரிசீலனை செய்ய கோரியிருந்தோம். நூல் விலை உயர்ந்து கொண்டேபோகும் நிலையில், உறுப்பினர்களின் உணர்வுகள் சங்கத்துக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனவே சில முடிவுகளை எடுக்க செயற்குழுக் கூட்டம் கூட்டப்பட்டது" என்றார்.

கடந்த 17-ம் தேதியில் இருந்து உயர்த்த வேண்டிய 10 சதவீத விலை உயர்வை இதுவரை அறிவிக்காத நிறுவனங்கள் அதனை அறிவிக்க வேண்டும். சைமா சங்க உறுப்பினர்கள் ஒரே மாதிரி விலை உயர்வை கடைப்பிடிக்க வேண்டும். மூலப்பொருட்களின் விலை உயர்வை கூர்ந்து கவனித்து, தேவைப்பட்டால் விலை நிர்ணயித்தை மாறுதல் செய்ய, மீண்டும் செயற்குழு கூட்டி முடிவு செய்யலாம். நூல் விலை உயர்வை அகில இந்திய அளவில் கட்டுப்படுத்த வேண்டியுள்ளதால், திருப்பூரில் உள்ள அனைத்து பின்னலாடை உற்பத்தியாளர்கள் சங்கம், பிற மாநிலங்களில் உள்ள உற்பத்தியாளர்கள் சங்கங்களுடன் ஆலோசிக்கலாம்.

இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை, அந்தந்த மாநில மற்றும் மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும்படி செய்யலாம். ஒரு முறை நூல் விலையை நிர்ணயித்தால் குறைந்தது 3 மாதங்களுக்கு நூற்பாலை சங்கங்கள் மாற்றம் செய்யக்கூடாது என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x