Published : 01 Jan 2021 07:53 AM
Last Updated : 01 Jan 2021 07:53 AM

வெள்ளகோவிலில் பரிகார பூஜையின் போது பெண் கொலை 6 தனிப்படைகள் அமைத்து போலீஸார் விசாரணை

வெள்ளகோவிலில் பரிகார பூஜையின் போது பெண்ணை கொலை செய்தது தொடர்பாக, போலீஸார் 6 தனிப்படைகள் அமைத்து விசாரிக்கின்றனர்.

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் ஏ.பி. புதூரை சேர்ந்தவர் ஆறுமுகம்(60). இவரது மனைவி ஈஸ்வரி(55). தம்பதியரின் மகன் உதயகுமார், திருமணமாகி மனைவியுடன் தனியாக வசித்துவருகிறார்.

அவருக்கு குழந்தை பாக்கியத் துக்காக ஆட்டோ ஓட்டுநர் சக்திவேல் (40) மூலம் பரிகார பூஜைக்கு பெற்றோர் ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிலை யில், பூஜையின்போது ஈஸ்வரி உயிரிழந்தார்.

இது தொடர்பாக போலீஸார்கூறியதாவது: பரிகார பூஜையின்போது, ஆறுமுகத்தையும், அவரது மனைவி ஈஸ்வரியையும், காலில் விழுந்து சக்திவேல் ஆசீர்வாதம் வாங்க கூறியுள்ளார். அப்போது ஆறுமுகத்தை கல்லால் தாக்கிவிட்டு, ஈஸ்வரியின் தலையில்பலமாக தாக்கி உள்ளார் சக்திவேல். மேலும் ஈஸ்வரி அணிந்திருந்த 5 பவுன் நகை, ஆறுமுகம் வைத்திருந்த ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை பறித்துக்கொண்டு, கடைக்குள் பூட்டிவைத்துவிட்டு சக்திவேல் ஓடிவிட்டார்.

திண்டுக்கல் மாவட்டம் கோடாங்கி பட்டியை சேர்ந்த சக்திவேல், வெள்ள கோவில் திருவள்ளுவர்நகரில் குடும்பத்துடன் வசித்துவந்துள்ளார். சுமார் 7 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டியும், பரிகார பூஜைகளுக்கும் சென்று வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

சக்திவேல் மீது ஏற்கெனவே கொலை முயற்சி, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. ஈஸ்வரி கொலை வழக்கு தொடர்பாக காங்கயம் காவல் துணை கண்காணிப்பாளர் தனராஜ் தலைமையில் 6 தனிப்படைகள் அமைத்து சக்திவேலை தேடி வருகிறோம் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x