Published : 31 Dec 2020 03:19 AM
Last Updated : 31 Dec 2020 03:19 AM

குடகனாற்றில் தண்ணீர் திறந்துவிடக் கோரி விவசாயிகள் இரு சக்கர வாகன பேரணி

திண்டுக்கல்

குடகனாறு ஆற்றின் கடைமடைப் பகுதிக்குத் தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தி இரு சக்கர வாகனத்தில் விவசாயிகள் பேரணி நடத்தினர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் குடகனாறு ஆற்றின் கடைமடைப் பகுதி விவசாயிகளுக்குக் கடந்த 10 ஆண்டுகளாகத் தண்ணீர் வரவில்லை. இதனால் ஆற்றை ஒட்டியுள்ள பகுதிகளில் குடிநீர்ப் பிரச்சினை மற்றும் விவசாயிகளுக்கு நீர்ஆதாரம் கிடைக்காமல் உள்ளது.

இதையடுத்து நேற்று கூம்பூர் கிராமத்தில் இருந்து வேடசந்தூர் வழியாக குடகனாறு அணை தொடங்கும் இடத்துக்குச் செல்லத் திட்டமிட்டு இரு சக்கர வாகனப் பேரணியை விவசாயிகள் தொடங்கினர். 40 கி.மீ. தூரத்தைக் கடந்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வந்தவர்களை, தொடர்ந்து செல்லவிடாமல் போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குடகனாறு கடைமடைப் பகுதிக்குத் தண்ணீர் திறந்துவிடவேண்டும். மணல் திருட்டைத் தடுக்க வேண்டும். ராஜவாய்க்காலில் கட்டப்பட்டுள்ள தடுப்பணையை அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். பின்னர், ஆட்சியர் மு.விஜயலட்சுமியிடம் மனு அளித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x