Published : 30 Dec 2020 03:17 AM
Last Updated : 30 Dec 2020 03:17 AM

நொய்யலாறு கிளை ஓடையில் சாயக் கழிவுநீர்

திருப்பூர்: நொய்யலாற்றின் கிளை ஓடையான திருப்பூர் - பல்லடம் சாலை கரைப்புதூர் ஓடையில் நேற்று காலை முதல் தண்ணீர் நிறம் மாறி சிவப்பு நிறத்தில் ஓடியதை பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் பார்த்தனர். இந்த ஓடை அமைந்துள்ள பகுதியைச் சுற்றிலும் ஏராளமான சாய ஆலைகள் செயல்படுகின்றன. இந்நிலையில், சாயக் கழிவுகளை சுத்திகரிக்க செலவு அதிகம் பிடிக்கும் என்பதால், சுத்திகரிக்காமல் ஆலைகள் வெளியேற்றியதே இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து திருப்பூரை சேர்ந்த சமூக ஆர்வலர் ஏ.ஈசுவரன் கூறும்போது, "சின்னக்கரை பாலத்தில் நின்று பார்த்தபோது, அந்த ஓடையில் இதுவரை இல்லாத அளவில் சாயக் கழிவுநீர் ஓடிக் கொண்டிருந்தது. இதுவரை சாயக் கழிவுநீரை நிலத்துக்குள் விட்டு பாழ்படுத்தியவர்கள், தற்போது ஓடையில் திறந்துவிட்டுள்ளனர். இந்த சாயக் கழிவுநீர் ஜம்மனை ஓடை வழியாக நொய்யலாற்றிலேயே கலக்கும். வேறு எங்கும் செல்லாது. இவ்விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம், மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x