Published : 30 Dec 2020 03:18 AM
Last Updated : 30 Dec 2020 03:18 AM

வேளாண் சட்டங்களால் உணவுக்கு கையேந்தும் நிலை ஏற்படும் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் கருத்து

தஞ்சாவூர்

அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பில் விவசாயிகளை பாதிக்கும் புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி தஞ்சாவூரில் நேற்று பொதுக்கூட்டம் நடைபெற்றது.

அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு மாநில ஒருங்கிணைப்பாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப் பாளர் என்.வி.கண்ணன் வரவேற் றார்.

இதில், எம்பிக்கள் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம், செல்வராஜ், எம்எல்ஏ துரை.சந்திரசேகரன் மற்றும் தமிழகத்தில் உள்ள 54 விவசாயிகள் சங்கங்களின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயி கள் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் பெ.சண்முகம் பேசியது: ஆளுங்கட்சியினர் வேளாண் சட்டங்களை ஆதரித்து கூட்டங்களை நடத்துவது போல, அதை எதிர்த்து கூட்டங்கள் நடத்த எங்களுக்கும் உரிமை இருக்கிறது. இது அரசியல் சாசனம் கொடுத்துள்ள உரிமை.

டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால், பிரதமர் மோடி விவசாயிகளை சந்தித்து பேசாமல், டிவி, ரேடியோவில் பேசி வருகிறார். மத்திய அரசு இந்த சட்டத்தை நிறைவேற்றியுள்ளதால், வருங்காலத்தில் உணவுக்கு நாம் கையேந்தும் நிலை ஏற்படும். எனவே, இந்த சட்டங்களை திரும்ப பெற வேண்டும். இந்த சட்டங்களால் 22 லட்சம் விவசாயிகளின் இலவச மின்சாரம் பறிபோகும் நிலை ஏற்படும். டெல்லியில் போராட்டத்தை சுமுகமாக முடிக்க மத்திய அரசு முன் வர வேண்டும்.

எனவே, மத்திய அரசு உடனடியாக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வேளாண்மை சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்றார்.

கூட்டத்தின் முடிவில், டெல்லி யில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகளுடன், மத்திய அரசு நடத்தும் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தால், சென்னையில் காத்தி ருப்பு போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x