Published : 29 Dec 2020 03:15 AM
Last Updated : 29 Dec 2020 03:15 AM

டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி முருகம்பாளையத்தில் உண்ணாவிரதப் போராட்டம்

குடியிருப்புகளுக்கு மத்தியில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுக்கடையை அகற்ற வலியுறுத்தி, முருகம்பாளையம் பகுதி பொதுமக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் வீரபாண்டி காவல் எல்லைக்கு உட்பட்ட முருகம்பாளையம் பகுதியில், குடியிருப்புக்கு மத்தியில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுக்கடையை அகற்ற வலியுறுத்தி, அப்பகுதியை சேர்ந்த அனைத்து அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் சார்பில் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டு, மாவட்ட ஆட்சியர், மக்களவைத் தொகுதி உறுப்பினர், சட்டப்பேரவை உறுப்பினர் மற்றும் அமைச்சர் உள்ளிட்டோரிடம் மனு அளிக்கப்பட்டது.

இருப்பினும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால், டிசம்பர் 28-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என, பொதுமக்கள் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், போராட்டத்துக்கு காவல் துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்டது. மேலும், உண்ணாவிரதப் போராட் டத்துக்காக அமைக்கப்பட்டிருந்த பந்தல், நாற்காலிகளை காவல் துறையினர் நேற்று அகற்றினர். இதனால், போராட்டக் குழுவின ருக்கும், காவல் துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பந்தல் அகற்றப்பட்ட நிலையில், பொதுமக்கள் தடையை மீறி கழுத்தில் மதுபாட்டில்களை அணிந்து எதிர்ப்பை வெளிப்படுத்தி யதுடன், கறுப்புக் கொடியுடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாநகர காவல் தெற்கு சரக உதவி ஆணையர் நவீன்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, பொதுமக்களின் கோரிக்கை தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு முன்மொழிவு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து உண்ணாவிரதப் போராட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (டிச.29) அதிகாரிகளை சந்திக்க பொதுமக்கள் முடிவு செய்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x