Published : 22 Dec 2020 03:15 AM
Last Updated : 22 Dec 2020 03:15 AM

ஆய்வுக்காக ஆழ்குழாய் கிணற்று நீர் மாதிரிகள் சேகரிப்பு

திருப்பூரில் குடியிருப்பு பகுதிகளில்நிலத்தடி நீர் நிறம் மாறி வரும் விவகாரத்தில், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சார்பில் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பெருமாநல்லூர் சாலை மும்மூர்த்தி நகர், பூலுவப்பட்டி, மொராஜ் தேசாய் நகர், நெசவாளர் காலனி உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதிகளில் உள்ள வீடுகளில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்குழாய் கிணறுகளில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர், கடந்த சில நாட்களாக சிவப்பு நிறத்தில் வருகிறது. இதற்கு, அப்பகுதிகளிலுள்ள சாய, சலவை ஆலைகளே காரணம் என புகார் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், சம்பந்தப்பட்ட பகுதிகளிலுள்ள ஆழ்குழாய் கிணறுகளில் இருந்து வரும் நீரை நேற்றுஆய்வு செய்த திருப்பூர் வடக்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், அவற்றிலிருந்து ஆய்வுக்காக மாதிரிகளையும் சேகரித்தனர். மேலும், பொதுமக்கள் புகார் தெரிவித்த பகுதிகளில் உள்ள சலவை ஆலைகளில் இருந்தும் கழிவுநீரின் மாதிரிகளை சேகரித்தனர். சேகரிக்கப்பட்ட மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பிவைக்கப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x