Published : 22 Dec 2020 03:16 AM
Last Updated : 22 Dec 2020 03:16 AM

மின் வாரிய ஊழியர்கள் காத்திருப்புப் போராட்டம்

தஞ்சாவூர்

மின்வாரிய காலிப் பணியிடங்களை அவுட்சோர்ஸிங் முறையில் நிரப்ப எதிர்ப்பு தெரிவித்து தஞ்சாவூர், திருச்சி, நாகப்பட்டினம், கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டையில் மின்வாரிய அலுவலகங்களில் நேற்று மின்வாரிய அனைத்து தொழிற்சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மின் வாரியத்தை தனியார்மயமாக்குவதை கண்டித்தும், மின் வாரியத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களை தமிழக அரசு உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மின் வாரியத்தில் தற்போது மின் விநியோக பிரிவில் உள்ள காலிப் பணியிடங்களை தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் மூலம் (அவுட்சோர்ஸிங்) நிரப்பும் முடிவை கைவிடவேண்டும். அதற்கான அரசு ஆணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தியும் நடைபெற்ற போராட்டத்தில் மின்வாரியத்தில் பணிபுரியும் நிரந்தர மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் பெரும்பாலானோர் பங்கேற்றதால், அலுவலக பணிகளும் மின் விநியோக பணிகளும் பாதிக்கப்பட்டன.

தஞ்சாவூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்துக்கு, ஏஐடியுசி தொழிலாளர் சம்மேளன மாநில துணைத் தலைவர் பொன்.தங்கவேலு தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் ஏ.முபாரக்பாட்சா, சிஐடியு மாநில துணைத் தலைவர் எஸ்.ராஜாராமன், மாவட்ட பொருளாளர் பி.காணிக்கைராஜ், ஐக்கிய சங்கம் மாவட்டத் தலைவர் ராகவன், தொமுச திட்ட துணைச் செயலாளர் சசிகுமார், பொறியாளர் சங்கம் மாவட்டச் செயலாளர் சுந்தர், அம்பேத்கர் சங்கம் ஸ்டாலின் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

திருச்சியில்...

திருச்சி மன்னார்புரத்தில் உள்ள மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் மின் வாரிய அனைத்துத் தொழிற்சங்கத்தினர் நேற்று காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரங்கராஜன் மற்றும் மின் வாரிய தொழிற்சங்கங்களைச் சேர்ந்த தொமுச மலையாண்டி, ஐஎன்டியுசி கண்ணன், தொழிலாளர், பொறியாளர் ஐக்கிய சங்கம் சிவசெல்வம், எம்ப்ளாயீஸ் பெடரேசன் கருணாநிதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நாகையில்...

நாகை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில், மின் ஊழியர்கள் சார்பில் நேற்று முற்றுகை போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு மின் ஊழியர் மத்திய அமைப்பு மாவட்டத் தலைவர் சிவராஜன் தலைமை வகித்தார்.

கரூரில்...

கரூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வைப் பொறியாளர் அலுவலக வளாகத்தில் மின் ஊழியர்கள் கூட்டுக்குழுத் தலைவர் எல்.முருகவேல் தலைமையில் மின் ஊழியர்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிஐடியு நிர்வாகி தனபால் முன்னிலை வகித்தார்.

பெரம்பலூரில்...

பெரம்பலூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்துக்கு, மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநிலச் செயலாளர் அகஸ்டின் தலைமை வகித்தார்.

புதுக்கோட்டையில்...

புதுக்கோட்டை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்துக்கு மின் ஊழியர் சங்கத் தலைவர் பிரகாஷ் தலைமை வகித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x