Published : 07 Dec 2020 03:15 AM
Last Updated : 07 Dec 2020 03:15 AM

எண்ணெய் குழாய் பதிக்கும் திட்ட ஒப்பந்தத்தை மீறியதாக அதிகாரிகளை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் நிறுவனம் சார்பில், கோவை மாவட்டம் இருகூரிலிருந்து கர்நாடக மாநிலம் தேவனகொந்தி வரை விளைநிலங்கள் வழியாக எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டம் (ஐடிபிஎல்) செயல்படுத்தப்பட உள்ளது. இதனால் திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 6 மாவட்ட விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்றும், திட்டத்தை சாலையோரமாக நிறைவேற்ற வேண்டும் என்றும்பாதிக்கப்படும் விவசாயிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது.இத்திட்டத்தை பொறுத்தவரை, தற்போதுள்ள சூழலில், இவ்விவகாரத்தில் தமிழக அரசு ஒரு கொள்கை முடிவை அறிவிக்கும் வரை எந்த பணிகளும் மேற்கொள்வதில்லை என அரசு அதிகாரிகள், பாரத் பெட்ரோலிய நிறுவனத்தினர் மற்றும் விவசாயிகள் இடையே முத்தரப்பு ஒப்பந்தம், ஒவ்வொருமாவட்டத்திலும் போடப்பட்டுள்ளதாக விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் சின்ன ஆனங்கூர் பகுதியில் பாரத் பெட்ரோலியம் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் விவசாயிகளுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை மீறி நில அளவீட்டு பணிகளில் ஈடுபட்டதாக கூறியும், இதனை கண்டித்தும் திட்டத்தால்பாதிக்கப்படும் விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில், திருப்பூர் மாவட்டம் கண்டியன்கோயில் அருகே குளத்துப்பாளையம் கிராமத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முத்துராமலிங்கம் தலைமை வகித்தார்.விவசாயிகள் பலர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x