Published : 19 Nov 2020 03:15 AM
Last Updated : 19 Nov 2020 03:15 AM
அரசு உதவி பெறும் பள்ளியில் 6-ம் வகுப்பும், பிற வகுப்புகளை அரசுப் பள்ளியிலும் பயின்ற மாணவிக்கு மருத்துவ மாணவர் சேர்க்கையில் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு சலுகை வழங்க முடியாது என உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.
தஞ்சை நாவக்கொல்லையைச் சேர்ந்த அறிவழகன், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:
என் மகள் அரிவிக்கா, நாவக்கொல்லை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 5-ம் வகுப்பு வரை படித்தார். பின்னர் குடும்பச் சூழல் காரணமாக மனைவியின் ஊரான புன்னவாசலுக்கு இடம்பெயர்ந்தோம். அங் குள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் அரிவிக்கா 6-ம் வகுப்பு படித்தார். பின்னர் மீண்டும் நாவக்கொல்லையில் குடியேறினோம். அங்கு 7-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசுப் பள்ளியில் பயின்றார்.
பத்தாம் வகுப்பில் 467 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்த அவர், பிளஸ் 2-வில் 453 மதிப்பெண்கள் பெற்று வகுப்பில் முதலிடம் பிடித்தார். பின்னர் நீட் தேர்வு எழுதி 270 மதிப்பெண் பெற்றார். மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீடு சலுகையை என் மகளுக்கு வழங்கினால் மருத்துவம் பயில சீட் கிடைக்க வாய்ப்புள்ளது.
ஆனால், 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு மட்டுமே 7.5 சதவீத உள் ஒதுக்கீடு சலுகை பொருந்தும் என்பதால் என் மகளுக்கு மருத்துவ சீட் கிடைப்பதில் சிரமம் உள்ளது. வறுமையால் படிப்பை நிறுத்த வேண்டிய சூழலில் அரசு உதவிபெறும் பள்ளியில் 6-ம் வகுப்பு மட்டும் பயின்றார்.
எனவே, என் மகள் அரசுப் பள்ளியில் பயின்றவர் எனக் கருதி, மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வில் உள் ஒதுக்கீடுச் சலுகைப் பட்டியலில் அவரது பெயரைச் சேர்க்கவும், அதுவரை ஒரு மருத்துவ இடத்தை ஒதுக்கி வைக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரரின் வழக்கறிஞர் வாதிடுகையில், “புன்னவாசலில் அரசுப் பள்ளி இல்லாததால் அரசு உதவிபெறும் பள்ளியில் மனுதாரரின் மகள் 6-ம் வகுப்புப் படித்தார். அங்கு அரசுப் பள்ளி இருந்திருந்தால் அங்குதான் படித்திருப்பார். மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு சலுகை பொருந்தாது என்பது பாகுபாடானது” என்றார்.
இதையேற்க மறுத்த நீதிபதிகள், “மனுதாரரின் மகள் 6-ம் வகுப்பு தவிர பிற வகுப்புகளை அரசுப் பள்ளியில் பயின்றுள்ளார். இருப்பினும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான உள் ஒதுக்கீட்டு சலுகைக்கான தகுதியை அவர் பூர்த்தி செய்ய வில்லை.
இதனால், மனுதாரருக்கு நிவாரணம் வழங்க முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது” என உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT