Published : 18 Nov 2020 03:14 AM
Last Updated : 18 Nov 2020 03:14 AM

திண்டுக்கல் மார்க்கெட்டில் தக்காளி விலை வீழ்ச்சியால் விவசாயிகள் பாதிப்பு

மார்க்கெட் தொடர் விடுமுறை, தொடர் மழையால் தக்காளி விலை வீழ்ச்சி அடைந்தது.

திண்டுக்கல் மாவட்டத்தில் பரவலாக தக்காளி விளைவிக் கப்படுகிறது. கடந்த ஒரு மாதமாகவே தக்காளி வரத்து அதிகம் காரணமாக விலை மிகவும் குறைந்து விற்றது. இந்நிலையில், தற்போது மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. தீபாவளியை முன்னிட்டு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மாவட்டத்தில் மார்க்கெட்டுகள் செயல்படவில்லை.

திங்கள்கிழமையிலும் போதுமான தக்காளி விற்பனை இல்லை. இதனால் தேங்கிய தக்காளிகள் நேற்று விற்பனை செய்யப்பட்டன. மழையால் செடியில் தக்காளியை விட்டு வைத்தால் பழம் உடைந்தும், அழுகியும் விடும் என்பதால் மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகம் இருந்தது. இதனால் ஒரு பெட்டி தக்காளி (14 கிலோ) ரூ.50 முதல் ரூ.80 வரை விற்றது. விவசாயிகளுக்கு ஒரு கிலோவுக்கு ரூ.3.50 முதல் ரூ.5.70 வரை மட்டுமே கிடைத்தது. இதனால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

வெளிமார்க்கெட்டில் தக்காளி ஒரு கிலோ ரூ.10 முதல் விற்பனையாகிறது. மழையால் செடியில் தக்காளி சேதமடைந்து வரும் நிலையில், மழைக்குப் பிறகு வரும் வாரங்களில் தக்காளி வரத்து குறையத் தொடங்கும். அதன்பிறகு விலை அதிகரிக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x