Published : 17 Nov 2020 03:13 AM
Last Updated : 17 Nov 2020 03:13 AM

வேட்டைக்காக சுத்தப்படுத்தும்போது நாட்டுத் துப்பாக்கி குண்டு பாய்ந்து இளைஞர் படுகாயம் தாத்தா, பேரன் கைது

பச்சமலையில் வேட்டைக்குச் செல்வதற்காக நாட்டுத் துப் பாக்கியை சுத்தப்படுத்தும் போது, அதிலிருந்து குண்டு பாய்ந்து இளைஞர் படுகாயமடைந்தார். இதுதொடர்பாக தாத்தா, பேரனை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே பச்சமலையிலுள்ள சோலைமாத்தி கிராமத்தைச் சேர்ந்தவர் தம்புசாமி(55). இவர் தீபாவளி பண்டிகையன்று வேட்டைக்குச் செல்வதற்காக தன்னிடம் இருந்த உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கியை, 9-ம் வகுப்பு படிக்கும் தனது பேரனுடன் சேர்ந்து சுத்தம் செய்து கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராமல் அந்த துப்பாக்கியில் இருந்து குண்டுகள் வெளியேறி எதிரில் அமர்ந்திருந்த அதே ஊரைச் சேர்ந்த சேகர் மகன் நவீன்குமாரின்(20) தொண்டை மற்றும் வலது தோள்பட்டையில் பாய்ந்தது. இதில் படுகாயமடைந்த நவீன்குமாருக்கு திருச்சியிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்த புகாரின்பேரில் உப்பிலியபுரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து தம்புசாமி, அவரது பேரனை நேற்று முன்தினம் கைது செய்தனர். மேலும் தம்புசாமியின் மகன்களான செல்லத்துரை, ரவி ஆகியோரைத் தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x