Published : 25 Nov 2021 03:13 AM
Last Updated : 25 Nov 2021 03:13 AM

தாம்பரம்-செங்கல்பட்டு இடையே - 3-வது பாதையில் ரயில்களை இயக்குவதற்கு ஒப்புதல் : கூடுதலாக ரயில்கள் இயக்க திட்டம்

சென்னை

தாம்பரம் - செங்கல்பட்டு இடையேயான 3-வது பாதையில் ரயில்களை இயக்க பாதுகாப்பு ஆணையர் ஒப்புதல் அளித்துள்ளார்.

சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு மார்க்கம் முக்கிய ரயில் போக்குவரத்துத் தடமாக உள்ளது. தென்மாவட்டங்களுக்கான விரைவு ரயில்களும், தினமும் 250-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்களும் இயக்கப்படுகின்றன. இதில் செங்கல்பட்டுக்கு போதிய ரயில் பாதை இல்லாததால், 170 மின்சார ரயில் சேவைகள் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படுகின்றன.

3 கட்டங்களாக..

இதற்கிடையே, தெற்கு ரயில்வேயின் கோரிக்கையை ஏற்று, தாம்பரம் - செங்கல்பட்டு இடையே 30 கி.மீ தூரத்துக்கு 3-வது பாதை அமைக்க மத்திய ரயில்வே அமைச்சகம் கடந்த 2016-ம் ஆண்டு ஒப்புதல் அளித்தது. அதன்படி, 2016-ம் ஆண்டு பிப்ரவரியில் இத்திட்டம் தொடங்கப்பட்டது. ரூ.256 கோடி திட்ட மதிப்பீட்டில் 3 கட்டங்களாக பணிகள் நடைபெற்றன.

இதற்கிடையே, ரயில் பாதை பணிகள் நிறைவடைந்த நிலையில், சமீபத்தில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, ரயில்களை இயக்க ரயில்வே பாதுகாப்பு ஆணையரகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதனால், இந்த தடத்தில் ரயில் சேவை விரைவில் தொடங்கப்படவுள்ளது.

இதுதொடர்பாக ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘தாம்பரம் - செங்கல்பட்டு இடையேயான 3-வது ரயில் பாதையை ரயில்வே பாதுகாப்பு ஆணையர் குழு ஆய்வு செய்துள்ள நிலையில், தற்போது இந்த தடத்தில் ரயில்களை இயக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

எனவே, தாம்பரம் - செங்கல்பட்டு இடையே மின்சார, விரைவு ரயில்கள் தாமதம் இன்றி இயக்கப்படும். அதுபோல், இந்த தடத்தில் பயணிகள் மற்றும் சரக்கு ரயில்களை கூடுதலாக இயக்குவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x