Published : 24 Oct 2021 03:07 AM
Last Updated : 24 Oct 2021 03:07 AM

தொழில் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் - கூடுதல் சலுகைகளுடன் தொழில் தொடங்க கடன் : 25 சதவீதம் மானியத்துடன் அதிகபட்சமாக ரூ.5 கோடி வரை பெறலாம்

புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சுயதொழில் தொடங்க கடன் பெற கல்வித் தகுதி தளர்வு செய்யப்பட்டு, மானிய தொகையும் உயர்த்தப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் கி.பால சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தொழில் வணிகத்துறையின் கீழ் இயங்கும் கடலூர் மாவட்ட தொழில் மையம், படித்த இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்பை தருவதற்கு, தொழில் முனைவோருக்கு தொழில் தொடங்க ஒரு வழிகாட்டி மையமாக செயல்பட்டு வருகிறது. படித்த இளைஞர்களை முதல் தலைமுறை தொழில் முனைவோராக உருவாக்கிட தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்படும் திட்டமே புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம் ஆகும்.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற அடிப்படை கல்வித் தகுதியாக அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்பு அல்லது பட்டயப்படிப்பு அல்லது தொழிற்கல்வி முடித்தவர்களும், குறைந்தபட்ச வயது 21 முதல் அதிகபட்சமாக 35 வரையுள்ள பொதுப்பிரிவினரும், குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 45 வயது வரை உள்ள சிறப்பு பிரிவினரும் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களிடமிருந்து 25 சதவீதம் மானியத்துடன் (ரூ.50 லட்சத்திற்கு மிகாமல்) ரூ.10 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.5 கோடி வரையிலான வங்கிக்கடன் பெற பரிந்துரை செய்யப்பட்டு வருகிறது.

தற்போது தமிழக அரசால் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கடன் பெற கீழ் குறிப்பிடப்பட்ட தளர்வு மற்றும் சலுகைகள் வழங்க ஆணையிடப்பட்டுள்ளது.

அதன்படி குறைந்தபட்ச கல்வித் தகுதி 12-ம் வகுப்பு தேர்ச்சி, 25 சதவீத மானியத்தொகையின் அதிகபட்சத் தொகை ரூ.50 லட்சத்திலிருந்து ரூ.75 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதலாக 10 சதவீதம் மானியம் வழங்கப்படும்.

பங்குதாரர் நிறுவனமாக இருக்கும் பட்சத்தில் பெரும் பான்மையான பங்குதாரர்கள் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவைச் சார்ந்திருந்தால் மட்டும் இந்த கூடுதல் மானியம் வழங்கப்படும்.

இந்த ஆணையானது 02.09.2021 முதல் செயலுக்கு வருகிறது.

கடலூர் மாவட்டத்தில் சுயதொழில் தொடங்க ஆர்வமுள்ள இளைஞர்கள் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பயனடையலாம். மேலும் விவரங்களுக்கு கடலூர், மாவட்ட தொழில் மைய பொது மேலாளரை நேரடியாகவோ அல்லது தொலைபேசி எண் 04142- 290116 வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கூறியுள்ளார்.

விவரங்களுக்கு தொலைபேசி எண் 04142- 290116 வாயிலாக தொடர்பு கொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x