Published : 05 Oct 2021 03:14 AM
Last Updated : 05 Oct 2021 03:14 AM

நெல்லை அருகே கல்குவாரி நீரில் மூழ்கி 2 சிறுவர்கள் மரணம் :

திருநெல்வேலி அருகே செயல்படாமல் இருந்த கல்குவாரியில் குளித்த போது தண்ணீரில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து பகுதியை சேர்ந்த கண்ணன் மகன் சக்தி (10). அப்பகுதியிலுள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் மகன் கார்த்திக் என்ற தங்கபிரபு (13), 8-ம் வகுப்பு படித்து வந்தார். இவர்கள் இருவரும் வடக்கு தாழையூத்தில் கல்வெட்டான் குழிபகுதியில் அமைந்துள்ள கல்குவாரிக்கு சைக்கிளில் சென்றுள்ளனர். தனியாருக்கு சொந்தமான அந்த குவாரி நீண்ட காலமாக செயல்படாமல் இருந்தது. கடந்த சில நாட்களாக அப்பகுதியில் பெய்த மழையில் கல்குவாரியில் தண்ணீர் பெருகியிருந்தது. அதில் இரு சிறுவர்களும் குளித்த போது திடீரென தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவலறிந்த தாழையூத்து போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த சிறுவர்களின் உடலை மீட்டு, விசாரணை மேற்கொண்டனர். கல்குவாரி தண்ணீரில் மூழ்கி சிறுவர்கள் 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

தாழையூத்து பகுதியில் பல கல்குவாரிகள் செயல்படாமல் ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிகிறது. இந்த கல் குவாரிகளுக்கு சிறுவர்கள் மற்றும் பொதுமக்கள் செல்லாத வகையில் குவாரிகளைச் சுற்றி தடுப்புகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x