Published : 30 Sep 2021 07:44 AM
Last Updated : 30 Sep 2021 07:44 AM
சேலம் மாவட்டத்தில் பச்சைப்பயிறு சாகுபடி செய்த விவசாயிகள் பயன்பெறும் வகையில் மத்திய அரசின் நாஃபெட் நிறுவனம் மூலம் குறைந்தபட்ச ஆதார விலையில் பச்சைப்பயிறு கொள்முதல் செய்யப்படவுள்ளது.
இதுதொடர்பாக சேலம் ஆட்சியர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சேலம் மாவட்டத்தில் 400 டன் பச்சைப்பயிறு கொள்முதல் செய்யப்படவுள்ளது. சேலம் மற்றும் மேச்சேரி ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் முதன்மை கொள்முதல் முகமைகளாக செயல்படுகிறது. இம்மையங்களில் பச்சைப்பயிறு கிலோ ஒன்றுக்கு ரூ.72.75 வீதம் 2021-ம் ஆண்டு அக்.12-ம் தேதி வரை கொள்முதல் செய்யப்படவுள்ளன. விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் பச்சைப்பயிறுக்கான கிரையத்தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்குக்கு நேரடியாக செலுத்தப்படும்.
இத்திட்டத்தின் மூலம் கொள்முதல் செய்யப்படவுள்ள பச்சைப்பயிறு நியாயமான சராசரி தரத்தினை கொண்டிருக்க வேண்டும்.
இதரபொருட்கள் கலப்பு 2 சதவீதம், இதர தானியங்கள் கலப்பு 3 சதவீதம், சேதமடைந்த பருப்புகள் 3 சதவீதம், சிறிதளவு சேதமடைந்தபருப்புகள் 4 சதவீதம் முதிர்வடையாத மற்றும் சுருங்கிய பருப்புகள் 3 சதவீதம், வண்டுகள் தாக்கிய பருப்புகள் 4 சதவீதம், ஈரப்பதம் 12 சதவீதம் தரத்தில் இருக்க வேண்டும்.
இத்திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்பும் விவசாயிகள் நிலச்சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை மற்றும் வங்கிக் கணக்கு ஆகிய விவரங்களுடன் சேலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை 98947 76675, 90803 23535 அல்லது மேச்சேரி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை 95438 12911 ஆகிய செல்போன் எண்களில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT