Published : 28 Sep 2021 03:19 AM
Last Updated : 28 Sep 2021 03:19 AM
புன்செய் புளியம்பட்டி அருகே பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 2250 கிலோ ரேஷன் அரிசியை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
ஈரோடு மாவட்டத்திலிருந்து சமீபகாலமாக வெளிமாநிலங்களுக்கு குறிப்பாக கேரள, கர்நாடக மாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவது அதிகரித்து வருகிறது. இதையடுத்து ஈரோடு மாவட்ட குடிமைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை போலீஸார் பல்வேறு பகுதியில், தீவிர வாகனச் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் ஈரோடு மாவட்டம் புன்செய் புளியம்பட்டி அடுத்த பண்ணாரி புதூர் பகுதியில், ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வுத்துறை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து இன்ஸ்பெக்டர்கள் பன்னீர்செல்வம், சக்திவேல், ரவிக்குமார் ஆகியோர் தலைமையிலான போலீஸார் அங்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். இதில், 2250 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீஸார், இது தொடர்பாக, செந்துரான் (39) என்பவரைக் கைது செய்தனர். ரேஷன் அரிசியை மொத்தமாக வாங்கி பதுக்கி வைத்து, அதிக விலைக்கு இவர் விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரிய வந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT