Published : 15 Sep 2021 03:12 AM
Last Updated : 15 Sep 2021 03:12 AM

உள்ளாட்சி பதவிகளுக்கு இன்று மனுத்தாக்கல் தொடக்கம் :

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 7,251 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தலில் வேட்பு மனுத் தாக்கல் இன்று தொடங்குகிறது.

தமிழகத்தில் வேலூர், ராணிப் பேட்டை, திருப்பத்தூர் உட்பட விடுபட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் வரும் அக்டோபர் 6 மற்றும் 9-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில், வேலூர் மாவட்டத்தில் உள்ள 247 கிராம ஊராட்சி மன்ற தலைவர், 2,079 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், 7 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 138 ஊராட்சி ஒன்றிய வார்டு கவுன்சிலர், 14 மாவட்ட ஊராட்சி வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு நேரடி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்காக மாவட்டத்தில் 1,331 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வேலூர் மாவட்டத்தில் உள்ள 7 ஊராட்சி ஒன்றியங்களுக்கும் தேர்தல் நடத்தும் அலுவலர்களாக அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 13 மாவட்ட ஊராட்சி வார்டு கவுன்சிலர், 125 ஊராட்சி ஒன்றிய வார்டு கவுன்சிலர், 208 ஊராட்சி மன்ற தலைவர், 1,779 கிராம ஊராட்சி வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதற் காக மொத்தம் 1,221 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 13 மாவட்ட ஊராட்சி வார்டு கவுன்சிலர், 127 ஊராட்சி ஒன்றிய வார்டு கவுன்சிலர், 288 ஊராட்சி மன்ற தலைவர், 2,220 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு நடைபெற உள்ள தேர்தலுக்காக மொத்தம் 1,410 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஊரக உள்ளாட்சி பதவி தேர்தலுக்கான மனுத்தாக்கல் இன்று (செப்.15) தொடங்க உள்ளது. ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் வேட்புமனுக்கள் விநியோகம் செய்யப்படுகிறது. மாவட்ட ஊராட்சி வார்டு கவுன்சிலர், ஊராட்சி ஒன்றிய வார்டு கவுன்சிலர், ஊராட்சி மன்ற தலைவர் ஆகிய பதவிகளுக்கு போட்டியிட விரும் புவோர் அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் வேட்பு மனுக்களை பெற்றுக்கொள்ளலாம். கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட விரும்புவோர் மட்டும் அந்தந்த கிராம ஊராட்சிகளின் அலுவலகங்களில் வேட்பு மனுக்களை பெற்றுக்கொள்ளலாம்.

மாவட்ட ஊராட்சி வார்டு பதவிக்கு போட்டியிடுபவர்கள் ரூ.1,000, ஊராட்சி ஒன்றிய வார்டு கவுன்சிலர், ஊராட்சித் தலைவர் பதவிகளுக்கு ரூ.600, கிராம ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு ரூ.200 வைப்புத் தொகை செலுத்த வேண்டும். ஆதிதிராவிடர், பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் கிராம ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு ரூ.100, ஊராட்சி ஒன்றிய வார்டு கவுன்சிலர், ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு ரூ.300, மாவட்ட ஊராட்சி வார்டு கவுன்சிலர் பதவிக்கு ரூ.500 வைப்புத்தொகை செலுத்த வேண்டும்.

ஊரக உள்ளாட்சித் தேர்தலை யொட்டி வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் தேர்தல் ஆயத்தப் பணிகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x