Published : 10 Sep 2021 05:58 AM
Last Updated : 10 Sep 2021 05:58 AM
மத்திய அரசின் கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள தேசிய தரவரிசைப் பட்டியலில் சேலம் பெரியார் பல்கலைக்கழகம் 73-வது இடம் பிடித்துள்ளது, என துணை வேந்தர் ஜெகநாதன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சேலம் பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தேசிய அளவிலான உயர்கல்வி நிறுவனங்களின் கல்வி மற்றும் ஆராய்ச்சி, நிறுவனங்களுடனான கூட்டு ஆய்வுகள், பட்டதாரிகள் உருவாக்கம், விரிவாக்கப் பணிகள் மற்றும் மக்களின் கருத்து உள்ளிட்ட அளவீடுகளைக் கொண்டு மத்திய அரசின் கல்வி அமைச்சகம் உயர்கல்வி நிறுவனங்களின் தரத்தை ஆய்வு செய்து வருகிறது.
இதன் அடிப்படையில், ஆண்டு தோறும் என்ஐஆர்எப் எனப்படும் தேசிய தரவரிசைப்பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதன்படி நேற்று (9-ம் தேதி) வெளியிடப்பட்ட 2021-ம் ஆண்டுக்கான தேசிய தரவரிசைப் பட்டியலில் நாட்டில் தலைசிறந்த 100 பல்கலைக் கழகங்களில் பெரியார் பல்கலைக்கழகம் 73-வது இடம் பிடித்துள்ளது.
கடந்த ஆண்டு தரவரிசைப்பட்டியலில் 83-வது நிலையிலிருந்த பெரியார் பல்கலைக்கழகம் இப்போது 10 இடங்கள் முன்னேறி 73-வது இடத்தை எட்டியுள்ளது. ஆராய்ச்சி, கற்றல் - கற்பித்தல் மற்றும் விரிவாக்கப் பணிகளில் பெரியார் பல்கலைக்கழகம் கடந்த ஆண்டை விட கூடுதல் புள்ளிகள் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT