Published : 08 Sep 2021 03:17 AM
Last Updated : 08 Sep 2021 03:17 AM
சேலத்தில் ரவுடிகளுக்கு இடையே நடந்த கோஷ்டி மோதலில், இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
சேலம் கிச்சிப்பாளையம் காளிக்கவுண்டர்காடு பகுதியைச் சேர்ந்தவர் குமரேசன். இவரது மகன் வினோத்குமார் (26). இவரது நண்பர்கள் அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (26), பிரதாப் (23), உதயகுமார் (17). நேற்று முன் தினம் இரவு வினோத்குமார் நண்பர்களுடன் வீட்டு வசதி வாரிய குடியிருப்புப் பகுதியில் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு வந்த 15 பேர் கொண்ட கும்பல் அவர்களை அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டனர். தகவல் அறிந்து சென்ற கிச்சிப்பாளையம் போலீஸார் காயமடைந்த 4 பேரையும் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பினர். அங்கு சிகிச்சை பலனின்றி வினோத்குமார் உயிரிழந்தார்.
விசாரணையில், ரவுடிகளுக்கு இடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் இந்த சம்பவம் நடந்தது தெரியவந்தது.
இதுதொடர்பாக மாவட்டம் முழுவதும் போலீஸார் உஷார்படுத்தப்பட்டனர்.
சங்ககிரி பேருந்து நிலையத்தில் சந்தேகத்துக்கு இடமாக நின்றிருந்த 6 பேரை சங்ககிரி டிஎஸ்பி நல்லசிவம் தலைமையிலான போலீஸார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் கிச்சிப்பாளையத்தில் நான்கு பேரை வெட்டியவர்கள் என்பதும், கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த சதாம் உசேன் (24), விஜி (22), கமல் (20), சஞ்சய் (20), நந்தகுமார் (22), மாதவன் (22) என்பதும் தெரியவந்தது. கிச்சிபாளையம் போலீஸார் 6 பேரை கைது செய்து மேலும், 9 பேரை தேடி வருகின்றனர்.
கொலையான வினோத்குமாரின் உறவினர்கள் நேற்று மதியம் ஆட்சியர் அலுவலகம் எதிரில் சாலை மறியலில் ஈடுபட்டனர். வினோத்குமார் கொலையில் தொடர்புடைய அதிமுக நிர்வாகி பழனிசாமி உள்ளிட்ட 15 பேரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என முழக்கமிட்டனர். மாநகர காவல் உதவி ஆணையர் நாகராஜ் தலைமையிலான போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT