Published : 25 Aug 2021 03:16 AM
Last Updated : 25 Aug 2021 03:16 AM

வீராணம் ஏரி நிரம்பியது : சிதம்பரம் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி

வீராணம் ஏரி மீண்டும் அதன்முழுக் கொள்ளளவை எட்டியது.இதனால் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதிவிவசாயிகள் மகிழ்ச்சியடைந் துள்ளனர். ஏரி நிரம்பியதைத் தொடர்ந்து சென்னைக்கு தண்ணீர் அனுப்பும் அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

காட்டுமன்னார்கோவில் அருகே உள்ளது வீராணம் ஏரி. இது கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரமாகும். இதன் முழு கொள்ளளவு 47.50 அடி ஆகும். இந்த ஏரியால் கடலூர் மாவட்ட காவிரி டெல்டா பகுதிகளான காட்டுமன்னார்கோவில், சிதம்பரம், புவனகிரி வட்டங்களில் உள்ள சுமார் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும், ஏரியில் இருந்து சென்னைக்கு தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது.

வீராணம் ஏரியில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பராமரிப்பு பணி நடந்தது. இதனால் ஏரியில் இருந்த தண்ணீர் வடிய வைக்கப்பட்டது. இதனால் சென்னைக்கு குடிநீர் அனுப்புவதும் நிறுத்தப்பட்டது.

இதற்கிடையே கடந்த ஜூன் மாதம் 12-ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக காவிரித் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் கல்லணையில் கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்டு, அது கீழணைக்கு வந்து சேர்ந்தது. கடந்த ஒரு மாதமாக கீழணையில் இருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டது.

தொடக்கத்தில் விநாடிக்கு 600 கனஅடி தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டது. அது படிப்படியாக உயர்த்தப்பட்டு, நேற்று விநாடிக்கு 1,652 கன அடி தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இதனால் ஏரி நிரம்பி, அதன் முழு கொள்ளளவான 47.50 அடியை எட்டியுள்ளது. சென்னைக்கு கூடுதலாக விநாடிக்கு 52 கன அடி தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

ஏரி நிரம்பியுள்ளதால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

“ஏரி நிரம்பிய நிலையில் ஏரியின் கரைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. சென்னைக்கு தொடர்ந்து தேவையான அளவுக்கு தண்ணீர் அனுப்பி வைக்கப்படும். விவசாயிகளின் தேவைக்கு தண்ணீர் திறந்து விடப்படும்” என்று சிதம்பரம் பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் சாம்ராஜ், உதவி செயற் பொறியாளர்கள் சிதம்பரம் பாலமுருகன், அணைக்கரை அருணகிரி ஆகியோர் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x