Published : 19 Aug 2021 03:13 AM
Last Updated : 19 Aug 2021 03:13 AM
தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கரோனா தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில், குழந்தைகளுக்கு பாலூட்டும் தாய்மார்களுக்கு, கரோனா தடுப்பூசி போடுவதில் சேலம் மாவட்டம் தற்போது முதலிடத்தில் உள்ளது.
கரோனா தொற்று பரவலைத் தடுக்க, மக்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணி நாடு முழுவதும் கடந்த ஜனவரி 16-ம் தேதி தொடங்கியது. முதல் கட்டமாக, முன் களப்பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டோர் எனத் தொடங்கி 45 வயதுக்கு மேற்பட்டோர், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கும் கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இதில், கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், ரத்தம் உறையாமை குறைபாடு உள்ளவர்களுக்கு தனிக்கவனம் செலுத்தி, அவர்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
பாலூட்டும் தாய்மார்களுக்கு ஜூன் 16-ம் தேதி முதல் கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தில், சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட மையங்களில் கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 46 சுகாதார மாவட்டங்களில், பாலூட்டும் தாய்மார்களுக்கு கரோனா தடுப்பூசி போடுவதில் சேலம் சுகாதார மாவட்டம் முதல் இடத்தில் உள்ளது. சேலம் சுகாதார மாவட்டத்தில் கடந்த 16-ம் தேதி வரை, மொத்தம் 11 ஆயிரத்து 183 பாலூட்டும் தாய்மார்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
2-வது இடத்தில் திருப்பூர் மாவட்டம், 3-வது இடத்தில் செங்கல்பட்டு மாவட்டமும் உள்ளன. சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் சுகாதார மாவட்டம் 5 ஆயிரத்து 732 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு, 12-வது இடத்தில் உள்ளது. 7 ஆயிரத்து 829 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு நாமக்கல் 5-வது இடத்திலும், 6 ஆயிரத்து 457 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு தருமபுரி 9-வது இடத்திலும், 3 ஆயிரத்து 250 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு, கிருஷ்ணகிரி மாவட்டம் 24-வது இடத்திலும் உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT