Published : 16 Aug 2021 03:21 AM
Last Updated : 16 Aug 2021 03:21 AM

சேலத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்1,311 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார் ஆட்சியர் :

சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், கரோனா பேரிடர் காலத்தில் சிறப்பாக பணிபுரிந்த செவிலியருக்கு ஆட்சியர் கார்மேகம் சான்றிதழை வழங்கினார். உடன் எஸ்பி  அபிநவ், மாவட்ட வருவாய் அலுவலர் ஆலின் சுனேஜா உள்ளிட்டோர். படம்: எஸ்.குரு பிரசாத்

சேலம்

சேலத்தில் நடந்த சுதந்திர தின விழாவில், முன் களப்பணியாளர்கள் 117 பேர் உள்ளிட்ட 1,311 பேருக்கு ஆட்சியர் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.

சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் நடந்த சுதந்திர தின விழாவில், ஆட்சியர் கார்மேகம் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, எஸ்பி  அபிநவ் முன்னிலையில் காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஆட்சியர் ஏற்றார்.

பின்னர், கரோனா தடுப்பு பணியில் சிறப்பாக பணிபுரிந்த 117 முன் களப்பணியாளர்கள் உள்ளிட்ட 1,311 பேருக்கு பாராட்டுச் சான்றிதழை வழங்கினார். தொடர்ந்து, கரோனா பாதிப்பால் உயிரிழந்த பத்திரிகை புகைப்பட கலைஞர் விஜயகுமாரின் மனைவி ஷீலா பவுலினுக்கு, முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.10 லட்சம் நிதியுதவி, கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட பெற்றோர் இருவரையும் இழந்த8 குழந்தைகளின் பாதுகாவலர்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி உட்பட நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.

சுதந்திரப் போராட்ட தியாகிகள், வாரிசுதாரர்களின் வீடுகளுக்கே அரசு அலுவலர்கள் சென்று கதர் ஆடை அணிவித்து மரியாதை செய்தனர்.

விழாவில், மாநகர காவல் ஆணையர் நஜ்மல் ஹோடா, சேலம் சரக டிஐஜி மகேஸ்வரி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் இயக்குநர் ஷேக் அப்துல் ரஹமான், எம்பி பார்த்திபன், மாவட்ட வருவாய் அலுவலர் ஆலின் சுனேஜா, சேலம் அரசு மருத்துவமனை டீன் வள்ளி சத்தியமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

சேலம் மாநகராட்சி

சேலம் மாநகராட்சியில் ஆணையர் கிறிஸ்துராஜ், தேசியக் கொடியை ஏற்றி வைத்து, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். தொடர்ந்து, சிறப்பாக பணிபுரிந்தவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழை வழங்கினார்.

மாநகர பொறியாளர் அசோகன், மாநகர நல அலுவலர் பார்த்திபன், உதவி ஆணையாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

சேலம் மாவட்ட மைய நூலகத்தில் மாவட்ட நூலக அலுவலர் கோகிலவாணி, சேலம் கோட்ட அரசுப் போக்குவரத்துக்கழக தலைமை அலுவலகத்தில் மேலாண் இயக்குநர் மோகன் ஆகியோர் தேசியக்கொடியை ஏற்றி வைத்தனர். ஆத்தூரில் கோட்டாட்சியர் சரண்யா, தலைவாசலில் வட்டாட்சியர் அன்புசெழியன் ஆகியோர் தேசியக் கொடியை ஏற்றி வைத்தனர்.

கேரள அரசின் பாராட்டுச் சான்று

கேரள மாநிலம் பரம்பிக்குளம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில் கடந்த 2010 மற்றும் 2011-ம் ஆண்டுகளில் சந்தன மரக்கடத்தல் தொடர்பான 3 வழக்குகளில் தொடர்புடைய 18 பேரை தமிழக வனத்துறையினர் உதவியுடன் கேரள வனத்துறையினர் கைது செய்தனர்.

மேலும், இவ்வழக்கில் சம்மன் அனுப்பியும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்த 8 பேரை சேலம் வனக்கோட்ட பணியாளர்கள் மற்றும் சேலம் மாவட்ட காவல்துறை உதவியுடன் கேரள வனத்துறையினர் கைதுசெய்தனர்.

குற்றவாளிகளை கைது செய்ய உதவியவர்களுக்கு கேரள மாநில வனத்துறை பாராட்டுச் சான்றிதழ் வழங்கியது. விழாவில், அச்சான்றிதழை கல்வராயன்மலை வனச்சரக அலுவலர் ஆரோக்கிய சாமி, வனவர் மணிகண்டன், வனக்காப்பாளர்கள் சவுந்தர்ராஜன், மொகம்மது சையத் அலி, வனக்காவலர்கள் ஆண்டி, சின்னாண்டி மற்றும் காவல்துறையில் எஸ்எஸ்ஐ கிருஷ்ணமூர்த்தி, ஏட்டுக்கள் அன்புமணி, ஈஸ்வரன், காவலர் பாபு ஆகியோருக்கு ஆட்சியர் கார்மேகம் வழங்கினார். மாவட்ட வனஅலுவலர் முருகன் உடனிருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x