Published : 03 Aug 2021 03:16 AM
Last Updated : 03 Aug 2021 03:16 AM
கல்விக் கட்டணச் சலுகை கோரி, சேலம் ஆட்சியரிடம் தனியார் பள்ளி மாணவர்கள் மனு அளித்தனர்.
சேலம் செவ்வாய்ப்பேட்டை பெரிய எழுத்துக்கார தெருவில் உள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை அரசு உதவி பெறும் பள்ளியாகவும், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 தனியார் வகுப்புகளாகவும் செயல்பட்டு வருகிறது.
இப்பள்ளியில் கடந்த 2020-21-ம் ஆண்டில் பிளஸ் 2 வகுப்பில் 150 மாணவர்கள் படித்தனர். தற்போது, தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், பிளஸ் 2 முடித்த மாணவர்களிடம் ரூ.7,500 கல்விக் கட்டணம் செலுத்த பள்ளி நிர்வாகம் வலியுறுத்தி வருவதோடு, கட்டணம் செலுத்தினால் மட்டுமே மாற்றுச்சான்று வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.
இதையடுத்து, நேற்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு பெற்றோருடன் வந்த அப்பள்ளி பிளஸ் 2 முடித்த மாணவர்கள், ஆட்சியரிடம் மனு அளித்தனர். மனுவில், ‘கல்விக் கட்டணச் சலுகை வழங்க வேண்டும். மேலும், மாற்றுச்சான்றிதழை உடனே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவித்திருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT