Published : 27 Jul 2021 03:13 AM
Last Updated : 27 Jul 2021 03:13 AM
சேலம் குமாரசாமிப்பட்டி ஆயுதப்படை மைதானத்தில் நேற்று (26-ம் தேதி) இரண்டாம் நிலை காவலர் பணியிடத்துக்கான உடல்தகுதித் தேர்வு நடந்தது.
இரண்டாம் நிலை காவலர் பணிக்கு எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்ற சேலம், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 3,913 பேரில், தினமும் 500 பேர் வீதம் உடல்தகுதித் தேர்வில் பங்கேற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தேர்வில் கலந்து கொள்ள வந்தவர்கள் கொண்டு வந்திருந்த கரோனா பரிசோதனை சான்றிதழை சரிபார்த்த பின்னர் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டனர். செல்போன், மின்னணு சாதனங்கள் தேர்வு நடக்கும் இடத்துக்குள் கொண்டு செல்ல அனுமதியளிக்கப்படவில்லை.
தேர்வில் உயரம் சரி பார்க்கப்பட்டு, அதில் 170 செமீ உயரம் தகுதியாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. உயரம் குறைபாடு உள்ளவர்கள் வெளியேற்றப்பட்டனர். எடை, மார்பளவு, 1,500 மீட்டர் ஓட்டம் உள்ளிட்ட தேர்வுகள் நடந்தது. தேர்வை, சேலம் மாநகர காவல் ஆணையர் நஜ்மல்ஹோடா, எஸ்பி அபிநவ் ஆகியோர் பார்வையிட்டனர். தேர்வு வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி வரை நடக்கவுள்ளது.
உடல்தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடல்திறன் தேர்வு நடத்தப்படும். இதில், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், கயிறு ஏறுதல் உள்ளிட்ட தேர்வுகள் வரும் ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் குமாரசாமிப்பட்டி ஆயுதப்படை மைதானத்தில் நடத்த காவல்துறை சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT