Published : 26 Jul 2021 03:13 AM
Last Updated : 26 Jul 2021 03:13 AM
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியதையடுத்து, அணையின் பாதுகாப்பு கருதி விநாடிக்கு 4,200 கனஅடி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது.
ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் பாசன ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையில் 105 அடி வரை நீரினைத் தேக்கி வைக்க முடியும். பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியாக விளங்கும் நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருவதால், பவானிசாகர் அணைக்கான நீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது.
கடந்த 23-ம் தேதி அணையின் நீர்மட்டம் 97 அடியாக இருந்த நிலையில், பில்லூர் அணை நிரம்பியதால் பவானி ஆற்றில் திறக்கப்பட்ட உபரி நீர் பவானிசாகர் அணையை வந்தடைந்தது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து நேற்று மாலை 100 அடியை எட்டியது.
இதையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி, பவானி ஆற்றில் விநாடிக்கு 4,200 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 100 அடியை தொட்டவுடன், உபரி நீர் திறக்கப்படும் என்பதால் கடந்த இரு நாட்களாகவே, கரையோரப்பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. பவானி ஆற்றின் கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிப்போர் மேடான பகுதிக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும்,பவானி ஆற்றில் குளிக்கவோ, கால்நடைகளை ஆற்றின் அருகில் அனுமதிக்கவோ வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
பவானிசாகர் அணையில் நேற்று மாலை நிலவரப்படி 28.73 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது. அணைக்கான நீர் வரத்து விநாடிக்கு 5,500 கனஅடியாக இருந்தது. தடப்பள்ளி அரக்கன்கோட்டை கால்வாய் பாசனத்துக்கு விநாடிக்கு 800 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
தற்போது அணையின் கீழ் மதகு வழியாக உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. 10 ஆயிரம் கனஅடிக்கு மேல் நீர்வரத்து இருக்குமாயின், அணையின் மேல் மதகுகள் மூலம் உபரி நீர் கூடுதலாக திறக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT