Published : 15 Jul 2021 03:13 AM
Last Updated : 15 Jul 2021 03:13 AM
பத்திரப்பதிவிற்கு ஒதுக்கப்பட்ட உரிய நேரத்தில், பதிவினை மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி அறிவுறுத்தினார்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் பதிவுத்துறை சார்பதிவாளர் அலுவலகத்தில், வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி நேற்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில், வணிக வரித்துறை செயலாளர் ஜோதி நிர்மலசாமி, பதிவுத்துறைத் தலைவர் மா.பா.சிவன் அருள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பெருந்துறை சார்பாதிவாளர் அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்ட பதிவுகளை ஆய்வு செய்த அமைச்சர் மூர்த்தி, பதிவு செய்த வாடிக்கையாளர்களின் செல்போன் எண்ணிற்கு அனுப்பும் குறுஞ்செய்தியில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நேரத்தில் பதிவுகள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வந்துள்ள வாடிக்கையாளர்களிடம், ஒதுக்கீடு செய்யப்பட்ட நேரத்தில் பதிவுகள் செய்யப்படுகிறதா என்றும், அவர்களுக்கு என குறிப்பிட்டுள்ள நேரத்தில் பதிவு செய்யப்படுகிறதா என்பதையும் ஒப்பிட்டுப் பார்த்து கேட்டறிந்தார். பத்திரப்பதிவு செய்ய வருபவர்களைக் காக்க வைக்கக்கூடாது என்பதற்காகத்தான், அவர்களுக்கு என குறிப்பிட்ட நேரம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அவ்வாறு ஒதுக்கப்படும் நேரத்தில் பத்திரப்பதிவு நடக்காமல், தாமதம் ஏற்பட்டால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார். பத்திரப்பதிவுத்துறை கூடுதல் தலைவர் நல்லசிவம், பெருந்துறை சார்பதிவாளர் எ.பாண்டுரங்கன் உள்ளிட்டோர் ஆய்வின் போது உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT