Published : 11 Jul 2021 03:14 AM
Last Updated : 11 Jul 2021 03:14 AM
ஈரோடு மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி கையிருப்பு இல்லாததால் 7-வது நாளாக நேற்று தடுப்பூசி போடும் முகாம் ரத்து செய்யப்பட்டது.
ஈரோட்டில் கரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, மாவட்டத்தில் தற்போது வரை 4 லட்சத்து 62 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கரோனா அச்சம் காரணமாக தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதனால் தடுப்பூசி போடும் இடங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் சார்பில் சுழற்சி முறையில் தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது.
இந்நிலையில் தடுப்பூசி கையிருப்பு இல்லாததால் கடந்த 4-ம் தேதி முதல் ஈரோடு மாவட்டம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த 7-ம் தேதி கோவிஷீல்டு தடுப்பூசி இரண்டாம் டோஸ் மட்டும் 1,600 பேருக்கு செலுத்தப்பட்டது. 8-ம் தேதி 17 மையங்களில் மட்டும் 2-வது தவணை தடுப்பூசி 3,950 பேருக்கு போடப்பட்டது.
எனினும், கடந்த 6 நாட்களாக கரோனா தடுப்பூசி முதல் டோஸ் பொதுமக்களுக்கு போடப்படவில்லை. நேற்றும் தடுப்பூசி கையிருப்பு இல்லாததால் 7-வது நாளாக மாவட்டம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி ரத்து செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர். அதேவேளையில் மாவட்டம் முழுவதும் 17 இடங்களில் கர்ப்பிணி பெண்களுக்கு மட்டும் கரோனா தடுப்பூசி போடப்பட்டது எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT