Published : 07 Jul 2021 03:14 AM
Last Updated : 07 Jul 2021 03:14 AM

ஆலங்குளம் அருகே மின் வேலியில் சிக்கி இளைஞர் உயிரிழப்பு :

ஆலங்குளம் அருகே மின்சார வேலியில் சிக்கி இளைஞர் உயிரிழந்தார்.

திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த இசக்கிமுத்து என்பவரது மகன் வள்ளிக்குமார் (28). இவர், நேற்று முன்தினம் இரவு ஆலங்குளம் அருகே உள்ள கிடாரக்குளத்தைச் சேர்ந்த தனது நண்பர்களுடன் மான், முயல் வேட்டைக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது.

குருவன்கோட்டை- துத்திகுளம் சாலையில் உள்ள ஒரு பொத்தை அருகே பால்ராஜ் என்பவருக்குச் சொந்தமான விவசாய நிலம் உள்ளது. இவர், தனது விவசாய பயிர்களை காட்டுப்பன்றிகளிடம் இருந்து பாதுகாக்க மின்சார வேலி அமைத்துள்ளார்.

அந்த வழியாக வேட்டைக்குச் சென்ற வள்ளிக்குமார், மின்சார வேலியை கவனிக்காமல் சென்றதால் அதில் உடல் பட்டு மின்சாரம் தாக்கியுள்ளது. இதில் தூக்கி வீசப்பட்ட அவரை, அவரது நண்பர்கள் சிகிச்சைக்காக ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அங்கு அவரை பரிசோதித்தபோது, வள்ளிக்குமார் ஏற்கெனவே இறந்துவிட்டது தெரியவந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குளம் போலீஸார், வள்ளிக் குமார் உடலை பிரேதப் பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத் தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த வள்ளிக்குமாருக்கு சரண்யா என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x